திங்கள், 27 ஏப்ரல், 2020

சாந்தி மந்திரங்கள்


சாந்தி மந்திரங்கள்





எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும் அதற்கான மன நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.

சாந்தி மந்திரங்கள் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த பழம்பெரும் ரிஷிகளின் அனுபவத்தில் வெளிப்பட்ட வேதப்பொக்கிசங்கள்.

பொதுவாக, உபநிஷதங்கள், ஸூக்தங்கள், போன்றவைகளைப் படிக்கும் பொழுது, அவைகளின் ஆரம்பத்துலும், இறுதியிலும் இந்த சாந்தி மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

சாந்தி மந்திரங்கள் அனைத்தும், இறுதியில் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று நிறைவு பெறுவதைக் காணலாம்.

'சாந்தி' என்றால் ‘அமைதி’ என்று பொருள்.

     நம் அன்றாட வாழ்வில் நமக்கு உண்டாகின்ற பல்வேறு துன்பங்களுக்கு மூலம், இங்கு கீழே கூறப்படுகின்ற மூன்று விதமான துன்பங்கள் ஆகும்.
அத்தகைய துன்பங்களிலிருந்து விடுபட்டு, நாம் அமைதியை அடையவே ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது.

மூன்று வகை துன்பங்கள் வருமாறு.

1.    ஆத்யாத்மிகம்: நம்மால் நமக்கு வரும் துன்பம்; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2.    ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் நமக்கு வரும் துன்பங்கள்.

3.    ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் துன்பம், மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சாந்தி என்று கூறுவதின் மூலம், இந்த மூவகைத் துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்காகப் பிராத்தனை செய்யப்படுகிறது.


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


******

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அணுவும் ஆன்மாவும்


ஆன்மா எதுவாக இருந்தாலும், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி, அது உருவமற்றது.

சிஷ்யனுக்கு குரு உபதேசிக்க விரும்புகின்றார். அந்த உபதேச உரையாடல் பின்வருமாறு அமைகின்றது.



குழந்தாய்! ‘ஆலம் பழம் ஒன்றைக் கொண்டு வா’
‘இதோ அய்யனே’
‘அதைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
‘அங்கு என்ன காண்கிறாய்?’
‘அணு வடிவான விதைகள், அய்யனே’
‘குழந்தாய்! அவற்றுள் ஒன்றைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
அங்கு என்ன காண்கிறாய்?’
ஒன்றுங்காணவில்லை’

குரு, சிஷ்யனை நோக்கிக் கூறுகின்றார்.

எந்த சூக்சும பொருளை நீ காணவில்லையோ, அந்த சூக்சும பொருளிலிருந்தே இந்த மிகப் பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கின்றது.

குழந்தாய்! அதில் மட்டும் சிரத்தை வைப்பாய். அணு மாத்திரமான அந்த ஸூக்சுமப் பொருள் எதுவோ…. அதுவாக நீயே உள்ளாய் (தத்-துவம்-அஸி).

எது உருவமற்றதோ, அது எங்கும் நிறைந்ததாகத்தான் இருக்கமுடியும் என்ற கருத்தை எல்லா தத்துவப் பிரிவுகளும் ஒப்புக் கொள்கின்றன.

ஓம் தத் சத்!

சனி, 18 ஏப்ரல், 2020

இருக்கு ஆனா இல்ல!



இருக்கு ஆனா இல்ல!


மண்டையில ’நச்சு’ன்னு ஒரு கொட்டு கொட்டி சொல்ல வேண்டியதை சொன்னாத்தான் சிலருக்கு புரியுதுங்க, அதனால அதுமாதிரி, ஒரு தடவ உங்க மண்டையிலே ‘நச்சு’ன்னு ஒரு கொட்டு, கொட்டிக்கிறேனுங்க.

அப்புறமா, எங்கருத்தெ உங்ககிட்டே சொல்றேனுங்க.

அதுவும் பழசுதாங்க, ஆனா, நானு உங்ககிட்ட புதுசா சொல்றேனுங்க.

அந்த விசயத்த பெரியவங்க ‘இருக்கு’ துன்னு சொல்வாங்க.

பலதடவ உங்ககிட்ட ‘இருக்கறதெல்லாம் சாமிதான்’ ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். ஆனா, உங்கள்ள ஒருத்தங்ககூட, அந்தப் பார்வையிலே இந்த உலகத்தப் பாக்கலே, பாக்குறதுமில்ல. அதுக்கு யாருமே தயாராவும் இல்ல.

ஏன்? உங்கள்ள யாருக்குமே இது புரிய மாட்டேங்குது? சொன்ன பெரியவங்க மேலே நம்பிக்க வர்லயா? இல்லே, அவங்க சொல்றது புரியலயா?

எத்தன சித்தன்ங்க வந்து இதைத்தான் சொல்லிட்டுப் போனாங்க. பல மகானுங்க வந்து பக்க பக்கமா புத்தகத்த எழுதி வைச்சாங்க.

ஆனா, அதப்படிச்சி பலன் என்ன வந்துச்சி!

நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன், எத்தனயோ புத்தகத்த படிச்சீங்க, படிச்சதுல என்ன புரிஞ்சுதுங்க?

இப்ப சொன்னத புரிஞ்சுக்கிட்டீங்களா? முதல்ல நல்லா கவனிங்க.

இப்போ, நீங்க இருக்கீங்களா? இல்லியா? அதுல ஒன்னும் சந்தேகமில்லியே!

ஏன் கேட்குறேன்னா? இருந்தாத்தானே சொல்றத உங்களால கேட்க முடியும். அதனாலத்தான்.

நீங்க இங்க இருக்குறதுன்னா, எதோ உடம்போட வந்து இங்க ஒக்காந்துகிட்டு இருக்கனும்னு அவசியம் இல்லிங்க. உங்ககிட்ட இருக்கிற மனச மட்டும் பெரியவங்க சொல்ற விசயத்திலே, நிப்பாட்டி கவனிச்சீங்கன்னா போதும். 

      மனசுல இருக்குறதுக்கு, எங்கெ இருந்தாலும், அங்க வெளிச்சம் இருந்தாலும், இல்லாட்டியும் நீங்க மட்டும் இருந்தா போதும்.

அதாவது, நீங்க எப்படி இருக்கறீங்களோ, அதுமாதிரித்தான் அதுவும் இருக்கு.

நான் இப்ப வக்கீலா இருக்கேன், அப்ப அதுவும் வக்கீலா இருக்கான்னு கேள்வி கேட்டு மடக்கிட்டதா நெனைக்காதீங்க.

இங்க சொல்லவர்ற விசயம் நீங்க நான் நெனைச்சிக்கிட்டிருக்கிற இந்த உடம்ப பத்தியோ, அந்த உடம்பு செய்யற வேலையப் பத்தியோ இல்ல.

உடம்புக்குள்ள இருக்குற உயிரைப்பத்தின விசயம்.

நீங்க உங்கள கண்ணுள பாக்கற மாதிரித்தான், அதயும் கண்ணுல பாக்கலாம்.

ஆமா! நெசம்தான்.

ஒன்னுமே இல்லீங்க, இது ரொம்ப ஈஸிங்க.

அதாவது, நீங்க காலையிலே கண் முழிச்சதும் பார்க்குற அத்தனப் பொருள்ளயும் அது ‘இருக்கு’. அதுமட்டுதான் இருக்குங்க. அது இல்லன்னா, எதுவுமே இருக்காதுங்க.

ஒவ்வொன்னளயும் அது ‘இருக்கு’, அது இருக்குறதுனாலத்தான் இந்த மொத்தப் பேரண்டமும் இருக்குங்க.

எல்லாரும் கல்லு, மண்ணு, கடவுள்னு வாய் கிழிய பேசறாங்களே, அந்த வாய் பேசறதுக்கே அது இருக்கனும்ங்க.

     ஆமா, நீங்க பாக்குற ஒவ்வொரு பொருள்ளயும், அதுமட்டும்தான் இருக்கு. ஆனா, நீங்க அத மட்டும் உட்டுட்டு, மத்த எல்லாத்தையும் பார்க்குறீங்க.

இது எப்படி இருக்குன்னா!

உங்க உடம்ப முழுசா காட்ற கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, கண்ணாடியில தெரியற உங்க உடம்ப மட்டும் முழுசா பார்த்து ரசிச்சீங்க, ஆனா, உங்க உடம்ப முழுசா காட்ற கண்ணாடிய கண்டுக்காம இருந்தீங்க.

அதுக்குப்பதிலா, இப்ப உங்க கவனத்த, உடம்ப தாண்டி கவனிச்சீங்கன்னா, அந்த கண்ணாடி இப்ப உங்க கண்ணுக்குத் தட்டுப்படும். அது மாதிரிதான், ஒவ்வொரு பொருளையும், ஆழமா அணுகினா, அதுங்க அங்க இருக்குறதுக்கு காரணமான ஒன்னு, அதுங்களுக்குள்ளே இருக்குங்கறத தெரிஞ்சிக்கலாமுங்க.

எதச் சொல்ல வந்தாலும், அதுல எங்க பாசையில இல்ல, இது தமிழு இல்ல, மத்த மொழின்னு எதையாவதெ சொல்லி, அதுல குத்தங்குறையத்தான் கண்டு பிடிக்கிறீங்களே தவிர, சொல்லவர்ற விசயத்த யாருமே கவனிக்கத் தயாரா இல்லீங்க.

ஒன்னுமில்லீங்க, நீங்க இப்ப ஒரு பூவ பாக்குறீங்க, அதுக்கு ரோஜான்னு நீங்கதான் உங்க பாசையிலே பேரு வச்சீங்க.

எப்படி?

இங்கிலீஸ்காரன் அவம் பாசையிலே ரோஸ் - னு சொன்னத, உங்க வாயில நுழையாம ரோஜ் - னு சொல்லி, சொல்லி ‘ரோஜா’ ன்னு ஆயிடுச்சு.

உங்களுக்கு இங்கிலீஸ்ல சொல்ல வர்ல. இதுக்கு நான் என்னத்தங்க செய்றது.

இதுமாதிரித்தான் எல்லாத்தலயும் மத்தவங்க சொல்றத சரியா புரிஞ்சுக்காம, இப்படித் தப்புத் தப்பா புரிஞ்சு வச்சிக்கிறீங்க.

இதுமாதிரித்தான் சாமியையும் தப்பாவே புரிஞ்சிக்கிட்டு, எங்கெல்லாமோ தேடுறீங்க.

அந்த ரோஜா பூவையே, திரும்பவும் உங்க கவனத்துல கொண்டுக்கிட்டு வரேன்.

அதாவது, அந்த ரோஜா - பூவை ஆழமா கவனிச்சீங்கன்னா, அதுக்கு உயிர் இருக்கு, அதுக்கு உணர்வு இருக்கு, அதுக்குன்னு வாசனை இருக்கு. அதுக்குன்னு ஒரு மென்மை இருக்கு, அதுக்குள்ள நீர்த்தன்மை இருக்கு, அதுக்குன்னு ஒரு சூடு இருக்கு, அதுக்குன்னு ஒரு சுவாசம் இருக்கு, அது பெரிசா வளர்றதுக்குன்னு சாப்பாடு வேணுமில்ல, அதுவும் சாப்பிட்டாகனுமில்லே, அதனால அதக்குன்னு வாயும் இருக்கு. அத தொட்டா வாடுதில்ல, அதனால அதுக்குன்னு தொடு உணர்ச்சிக்கூட இருக்கு.

இப்படி நமக்கு இருக்கறதெல்லாமே அதுக்கும் இருக்கு.

நமக்கு தெரியலேங்கறதுக்காக, அதுக்கு இல்லேன்னு ஆயிடாது.

நெசமாவே அது மாத்திரந்தான் இருக்கு. அது இருக்குறதுனாலேத்தான், இத்தனயும் இருக்கு.

அதுமாதிரித்தான் மத்த கல்லு, மண்ணு, கழுதெ, கடவுளு எல்லாமே.

நம்மகிட்ட இருக்குற கண், காது, மூக்கு, நாக்குன்னு எல்லாத்துக்குமே அது இருக்குறதெ தெரிஞ்சிக்கிற அளவு சக்தி இல்லேங்குறதுக்காக அது இல்லேன்னு ஆயிடுமா என்ன?

எல்லாத்துலயும் அது மட்டும்தான் இருக்கு. அதனாலதான் அத ‘இருக்கு’ - ன்னு சொல்றோம்.

ஒன்னுமில்லீங்க, நீங்க அத பாக்கணும், அப்பத்தான் ஒத்துக்குவேன்னு சொல்ல வரீங்களா?

தாராளமா அதப்பாக்கலாம். ஆனா, இந்த ஊணக்கண்ணுனாலெ இல்ல. உங்ககிட்ட இருக்கற மனக்கண்ணாலே பாக்கலாம்.

எப்படி?

உங்க மனசுல ஏகப்பட்டத ஏத்தி வச்சிக்கிட்டு இருக்குறீங்கள்ள அத அத்தனயும் கீழ இறக்கி வைச்சிட்டு, காலியா வைச்சுக்கற மனசுல, இப்ப நான் சொல்றத உள்ள போட்டுக்குங்க.

கண்ணுக்கு முன்னாடி, நீங்க எதப் பாத்தாலும், சாப்பிடற பொருள்ள எதைச் சாப்பிட்டாலும், மூக்குல முகந்துப் பாக்கற வாசன எதுவா இருந்தாலும், அதுல அது இருக்கறத தெரிஞ்சிக்கலாம்.

உங்க கவனத்த கடந்த காலத்துலயும், எதிர்காலத்துலயும் இருந்து விலக்கி, இப்ப, இந்த நொடியிலே, நிகழ் காலத்துல நின்னு, எத பாக்குறீங்களோ அத மட்டும் கவனிங்க. அதுல ஏற்கனவே சொன்னமாதிரி ரோசாப்பூவுல இருக்குற அத்தன அம்சமும் கவனிங்க.

ரொம்ப சிம்பிளுங்க, இந்தமாதிரி அத ஆழமா ஊடுருவி கவனிச்சீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாயிடுவீங்க. ஆமா, நெசந்தான் சொல்றேன். உங்களுக்கும் அதுக்கும் இடைவெளியிலே ‘காலம்ங்கறது’ இல்லாமப் போயி, இருக்கறதெல்லாம் ஒன்னா மாறிடும்ங்க.

நிகழ்காலத்துல நில்லுங்கன்னு சொல்றது, உங்களுக்குப் புரியரதுக்காகச் சொன்னேனே தவிர, நீங்க உடன நிகழ்காலத்தை புடிச்சிக்காதீங்க. நெசமாலுமே மூனு காலமும் இல்லீங்க.

அது நம்ம மனசு கத்துவச்சிக்கிட்ட கணக்கு பாடமுங்க அந்த காலங்கறது.

நீங்க வேனா வெட்டவெளியிலே நின்னுக்கிட்டு காலத்தை கணக்கிட்டுச் சொல்லுங்க பாக்கலாம். அங்க காலமும், தேசமும் இல்லீங்க.

சின்னவயசுலே இருந்தே நிறைய கணக்குகளப் பாத்து, பாத்து, மனசு அப்படியே பழகி, இப்ப எல்லாத்துலயும் கணக்கு பாக்குதுங்க.

இந்த கணக்கு பாக்குறத முதல்ல விடுங்க, சும்மா இருந்து, சுகமா அத கவனிச்சீங்கன்னா மட்டும் போதுங்க.

இதுதான் சூக்சுமம்ங்க. இதை புரிஞ்சிக்கிட்டு நடைமுறைல அனுபவத்துக்கு வந்தீங்கன்னா, நீங்களும், அதுவும் ஒன்னாகிடுவீங்க.

அப்புறம் இருக்கறதெல்லாம் அதுதான்ங்க. அதுமட்டும்தான் உங்களுக்குள்ளயும் இருந்துக்கிட்டு எல்லாத்தயும் பாக்குதுங்க, இதுதான் உங்களுக்கு நேரடி அனுபவம்ங்க.

அந்த அனுபவம் ஒரு ரோஜாப்பூவுல மட்டுமில்லீங்க. எல்லாத்துலயும் அத கவனிச்சு, அத உணரலாமுங்க.

அந்த அனுபவந்தான் சாமிங்க. இதுதாங்க சாமிய நேரடியா அனுபவிக்குறதுங்க.

இப்படி உங்களுக்குள்ளே அனுபவமாகமே, வெளியே எதைப் பார்த்தாலும், அது ஒரு உருவமாவும், பெயராவும் மட்டும்தான் இருக்கும்ங்க. அதனால, அதை வெறும் வார்த்தையா மட்டும் மனசுல வச்சிக்கிட்டு பிரயோஜனமில்லீங்க.

ஆனா, எல்லாருமே உருவத்துலயும், பெயர்லயும் சிக்கிக்கிட்டு, ஒவ்வொன்னையும் வார்த்தைகளாவே பாக்குறீங்க. யாருமே அதை அனுபவத்துக்கு கொண்டு வரலே.

அனுபவத்துக்கு கொண்டுவரனும்னா, கண்டிப்பா இந்த முறையை கடைப்பிடிங்க.

இத தெரிஞ்சிக்கிட்டா இருக்குறது சாமி மட்டும்தாங்க, அந்த சாமிதான் எல்லாம்ங்க. எல்லாமே சாமிதான் சொன்னா அப்புறம் நீங்க யாரு?

இப்ப புரிஞ்சுதா? இருக்கறதெல்லாம் சாமின்னு.

அதனால சாமியத்தேடறேன்னு எத எதயோ செய்யாதீங்க.

இருக்கறதத்தனையும் சாமியா பாருங்க. அப்புறம் பாருங்க இருக்கறதெல்லாமே பொதுவா போய்டும்ங்க. அப்படி எல்லாமே பொதுவா போயிட்டா, பதுக்கற வேலை இருக்காதுங்க.

பதுக்கறவங்க இல்லீங்கன்னா, விலைவாசி குறைஞ்சிடும்ங்க. இதனால இந்தியப் பொருளாதாரம்னு சொல்றாங்களே, அது உயரும்ங்க. அது உயர்ந்தா நீங்களும், நானும் உயருவமுங்க. நாம உயரனும்னு நீங்க நினைச்சீங்கன்னா, எல்லாத்தலயும் அது இருக்குறத பாருங்க.

இந்தமாதிரி எல்லாமே ஒன்னுன்னு புரிஞ்சிக்கிட்டவங்க மட்டுந்தான் சாமிய எல்லாத்தலயும் பாக்குறாங்க.

சரிங்க!, அந்த இருக்கு, இருக்குன்னு சொன்னீங்க அது எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லீங்களேன்னு கேட்குறீங்களா.

அது வேற ஒன்னுமில்லீங்க வெட்டவெளி தாங்க அது. அதுமட்டும்தான் எப்பொவுமே இருக்கு. மத்ததெல்லாம் வந்து, போயிட்டு இருக்கு.

அந்த வெட்டவெளிதாங்க சாமி. அந்த சாமிதாங்க உங்க உள்ளயும் இருக்குங்க. வெளியிலேயும் இருக்குங்க. எல்லா இடத்துலயும் இருக்குங்க. அதுமட்டும்தான் இருக்குங்க.

இதத்தான் அன்னிக்கு வாழ்ந்த பெரியவங்க சொன்னாங்க. ஆனா இன்னிக்கு வாழ்ற நமக்குத்தான் புரியல. புரிஞ்சிக்குங்க.

ரொம்ப சந்தோசமுங்க, அப்பால சந்திக்கலாமுங்கோ.

நன்றி! வணக்கமுங்க! 

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மனம்


மனம்

மனிதன் என்பவன் உடலாலும், உயிராலும் ஆனவன். மனம் என்பது மனிதனுக்கான சிறப்புத் தகுதி. அதுவே அவனின் உடலையும், உயிரையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கின்றது

கண்ணுக்குத் தெரிகின்ற புலன்களினால் உண்டாகும் அனுபவங்களைக் கண்ணுக்குத் தெரியாத மனமே உணர்கின்றது. உண்மையில் மனம் உணர்வதையே தான் உணர்வதாய் நாம் நம்புகின்றோம்.

அத்தகைய உணர்வே நம்முடைய வாழ்க்கையை அடையாளப் படுத்துகின்றது. நம் வாழ்வில் நடக்கின்ற அல்லது எதிர்கொள்கின்ற அனைத்து சம்பவங்களைக் குறித்த, பல்வேறு சிந்தனைகளை சிந்திப்பதும் மனமே.

அதன் வழியாகவே நம் ‘இருப்பை’ நாம் உணரவும், நமக்கான உலகை நாம் உண்டாக்கவும் முயல்கின்றோம்.

கண்ணிற்குத் தெரியாத அருவமான மனமே, கண்ணிற்குத் தெரிகின்ற உருவமான உடலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. பொதுவாகப் பார்த்தால் உடலாகத் தெரியும் நாம், நுட்பமாகப் பார்க்கும் போது மனமாக இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கும்போது உயிராக மட்டும் இருக்கின்றோம்.

மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள் நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது.

அத்தகைய இந்த மனதை சிக்கல்களில் இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் நம் சமயம் பல்வேறு கடவுள்களையும், வழிபாடுகளையும் புகுத்தியது.

மனதைச் சீர்படுத்திவிட முடியும் என்றால் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். சிலப் பயிற்சிகள் மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர்.

உண்மையில், மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும் கானல் நீர் போன்றது. நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. 

அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? முடியாது.

இதுதான் மாயையின் இலக்கணம்.

மனதைப் பற்றிக் கூறும் பொழுது, மனதின் இயல்பைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. நம்மால் மனதின் இயல்பை உள்ளவாறே விளங்கிக் கொள்ள இயலும் என நினைப்பது இயலாததாகவே இருக்கும்.

காரணம், மனதினுள் நுழையும் அனைத்து எண்ணங்களும் அங்கு தங்கி விடுவதில்லை. தொடர்ந்து நினைவு கொள்ளப்படுகின்ற எண்ணங்களே அங்கு நிலைப் பெறுகின்றன.

இதனால், மனதை எண்ணங்களின் தொகுப்பென்று மட்டும் கருதாமல், அதற்குள் இல்லாதப் பல புதிதான எண்ணங்களும் எழுவதைக் காணும் பொழுது, மனம் என்பது எண்ணங்களின் தற்காலிக இருப்பிடம் என்றும் அறியலாம்.

எண்ணங்கள் வந்து போகுமிடமாக மனதைக் கொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.

நமக்குள் நுழையும் எண்ணங்களில் எதைத்தக்க வைத்துக் கொள்ளலாம், எதை ஒதுக்கலாம் என்பதை புத்தி முடிவு செய்யும்.

பொதுவாக, எண்ணங்களை நாம் இரண்டு வழிகளில் பார்க்கின்றோம். ஒன்று நல்ல எண்ணம், மற்றொன்று கெட்ட எண்ணம். உண்மையில் அப்படியான இரண்டுவித எண்ணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

இருப்பது ஒரு எண்ணம் மட்டுமே. அதை இரண்டு கோணங்களில் நாம் பார்க்கிறோம். அவ்வளவே.

ஆக, நாம் நல்ல எண்ணம் என நினைப்பது பிறிதொருவருக்கு கெட்ட எண்ணமாகத் தோன்றலாம். அவர் கெட்ட எண்ணம் எனச் சொல்வது நமக்கு நல்ல எண்ணமாகத் தோன்றலாம்.

எண்ணம் எதுவாய் இருந்தாலும் அதைத் தக்க வைப்பதையும், தவிர்ப்பதையும் நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதுவே, எண்ணங்களை எதிர்கொள்ளும் ‘சாட்சி பாவனை’ வழிமுறையாகும்.

எண்ணங்கள் வருவதையும், போவதையும், சாட்சியாக நின்று கவனிக்கச் சொல்லும் சிறப்பான சிந்தனையை சீர் நோக்கிப் பாராமல் ‘சாட்சி’ பாவத்தை நம்மால் விளங்கிக் கொள்ளவே இயலாது.

சாட்சி பாவனைக்கு ஒருவன் தயாராக தவம் இருக்க வேண்டாம், கடினமான யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம், தத்துவக்கருத்துகளை ஊன்றிப்படிக்க வேண்டாம், கோயில் கோயிலாகச் செல்ல வேண்டாம், குறிப்பிட்ட குருவிடம் தீட்சை பெறவும் வேண்டாம்.

கொஞ்சம் அவனின் அகத்தில் நுழைந்து ‘நான் யார்?’ எனும் விசாரணையை மேற்கொண்டால் மட்டும் போதும். அந்தக் கேள்வி அவனின் அடையாளங்களில் இருந்து முதலில் அவனை விடுவித்து பிற்பாடு அவனிலிருந்தே அவனை விடுவித்து விடும்.

‘நான் யார்?’ எனும் ஆய்வைத் துவங்கும்போது பிண்டமும், அண்டமுமாக இருமைப்பட்டு இருக்கின்ற இந்த அண்டம், ஒருகட்டத்தில் அகண்ட அண்டமாக மட்டுமே காட்சியளிக்கும் அற்புதத்தை நிகழ்த்தும். அவ்வற்புதம் குறித்தான அனுபவங்கள், ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், அவ்வற்புதத்தின் வேராய் இருப்பது  ‘இருமை ஒருமையாக மாறி நிற்கும்’ காட்சியே ஆகும்.

அண்டத்தின் இயல்பான ஒருமையை உணர்ந்தாலும், பிண்டமாகிய தன் இயல்பான இருமை நிலையிலிருந்து, வெளி வந்துவிட முடியுமா? எனக் கேட்கத் தோன்றும்.

நல்ல கேள்விதான்.

நம் இயல்பிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்ற கற்பனையைக் கற்பித்துக் கொள்வதும் மனமே ஆகும்.

நம் இயல்பு என நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் இருமை அல்லது பன்மைகளின் பாதிப்பிலிருந்து விடுபட முயன்றால் போதும். அதற்கான முயற்சியை இயல்பாகத் தூண்டுவதே ‘நான் யார்?’ எனும் கேள்வியின் வழியாக நாம் பெறும் அனுபவம்.

மேலும், இந்த மனதைப் பற்றிய விசாரத்தை MP3 ஆடியோ பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய ஆடியோக்களைக் கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள முகவரி லின்க்கினை அழுத்தி MP3 ஆடியோக்களை பதிவிறக்கம் செய்துக் கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.


நன்றி!

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதன், 15 ஏப்ரல், 2020

வெட்டவெளி

   

வெட்டவெளி
========================


பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்துக் கொண்டிருக்கும்’ ஒரு இயக்கம். அதாவது, ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே ‘பிரபஞ்சம்’ என்று பெயர்.

'பிரபஞ்சம்' எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே 'பிரபஞ்சம்' என்றும், தமிழில் பேரண்டம் என்றும் கூறப்படுகின்றது.

பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக் கண்களால் ழுமையாகப் பார்த்துவிட முடியாது. அறிவியல் ஆய்வுகள் கூட, அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்துக் கூறுகின்றது.

ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதைக் கூட, முடிந்த முடிவாக விஞ்ஞானத்தினால் உறுதி செய்ய முடியாததிற்குக் காரணம், அது விநாடிக்கு, விநாடி விரிந்துக் கொண்டே இருக்கின்றது.

அத்தகைய இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரம் ஆகவும், அடிப்படையாகவும் இருப்பது வெளி ஆகும்.
இங்கு ‘வெளி’ என்று கூறுவதை பஞ்ச பூதங்களிலுள்ள ‘ஆகாயம்’ என்று தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடாது.

இதனை வெட்டவெளி எனத் தமிழ் சித்தர்கள் மிகவும் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

நாம்தான் அதைப் புரிந்துக் கொள்ள முடியாத விழிப்புற்ற ‘புத்தி சக்தி’ அற்றவர்களாக இருக்கின்றோம்.

அந்த வெட்டவெளியையே, இருப்பு, இறைவன், மெய்ப்பொருள், ஆதிமூலம் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றது.

இந்த வெட்டவெளியிலிருந்து வெளிப்பட்டதே இந்த பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், சூரியக் குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதன் என எல்லாமே.

வெட்டவெளியில் இருந்து ‘பிரபஞ்சம்’ தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு, என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை? அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கின்றது.

மெய்ஞானமோ முடிந்த முடிவை ‘சித்தாந்தம்’ ஆக்கிச் சிறப்பாகத் தந்திருக்கின்றது.

பேரண்டப்பெரு வெளியை மிகவும் எளிமையான வழியில் புரிந்து கொள்ளலாம்.
எவ்வித அசைவும் இல்லாதிருக்கும் வெட்ட வெளியில், திடீரென ஒரு அசைவு நிகழ்கிறது.

அந்த அசைவு ஏற்படுவதற்கு, எந்த இயக்கம் காரணமாக இருந்ததோ, அந்த இயக்கமே இந்த மொத்தப் பேரண்டம் முதற்கொண்டு, அனைத்தும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கின்றது.

வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் அழுத்தம் காரணமாக வெடிப்பு உண்டாகி, அந்த வெடிப்பின் அசைவால், மொத்த அண்டங்கள் விரிகின்றன.

இதை, சமயத்தின் வாயிலாக சற்று ஆழமாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம்.

அதாவது, வெட்டவெளி, பேரண்டம் போன்றவற்றை சிவம், சக்தி எனும் தெய்வங்களாக சமயம் வகுத்துள்ளது.

‘சிவம்’ என்பது வெட்டவெளியைக் குறிப்பது.

சிவம்’ என்றால் உயிருள்ளது. ‘சவம்’ என்றால் உயிரற்றது என நாமறிவோம்.

சிவத்தை நுட்பமாக சிந்தித்தால் இயக்கமற்று, ஆனால் உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். சவத்தை இன்னும் நுட்பமாக சிந்தித்தால் உயிரற்றதோடு அசைவற்றது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.

அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெட்ட வெளியே ‘சிவம்’ எனப்படுகின்றது.

திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.

அந்நிலையில் ‘சிவம்’ உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. உயிருள்ள, இயக்கமற்ற, வெட்ட வெளியான ‘சிவம்’ இயக்கத்திற்கு வரும் போது ‘சக்தி’ என அழைக்கப்படுகின்றது.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டு மானால், உயிருள்ள, இயக்கமற்ற, வெளியைச் ‘சிவம்’ என்றும், உயிருள்ள, இயக்கங்கள் நிகழும், வெளியை ‘சிவசக்தி’ என்றும் கொள்ளலாம்.

‘சிவசக்தி’ என்பது, அசையாத சிவத்தையும், அந்த சிவத்திடமிருந்து வெளிப்பட்ட, அசையும் சக்தியையும் ஒன்றாக இணைத்து ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்ற ஒரு கடவுளை உருவகப்படுத்தி சமயம் வழிபடுகின்றது.

வெட்டவெளியின் ஒரு சிறுபுள்ளியில் திடீரென நிகழும், இந்த அசைவால் உண்டாகும் சத்தமும் (நாதம்), வெளிச்சமும் (ரூபம்) பேரண்டத்திற்கான தோற்றப்புள்ளிகள்.

அதாவது, ஒரு பேரணுவில், நடந்த வெடிப்பில், பல்வேறு அணுக்களாக இந்த பேரண்டம் வெளிப்பட்டது.
அந்த வெடிப்பில் (அசைவில்) முதலில் ‘ஒலி’ தோன்றி, அதன்பிறகே ‘ஒளி’ தோன்றியதை அறியலாம்.

‘நாதம்’, ‘விந்து’ என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக் குறியீடுகளாகக் குறிப்பிடுவர்.

‘நாதம்’ என்பது ஒலி. ‘விந்து’ என்பது ஒளி.

நாத விந்து கலாதி நமோநம எனும் அருணகிரி நாதரின் ‘திருப்புகழ்’ ஒரு சான்று. ‘நாதம் (ஒலி)’ முதலிலும், ‘விந்து (ஒளி’) பிற்பாடும் என்பதாகவே அப்பாடலும் கூறுகின்றது.

நம்முடைய மக்களால் ஏற்படுத்திக் கொள்ளப் பட்ட மதங்கள் அவ்வொலியை ‘ஓம்’ என்றும், ‘ஆமென்’, ‘ஆமீன்’, என்றும் கூறுகின்றார்கள்.

சமயத்தில் இறைவனை ‘நாதன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ‘சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’ என்றும், ‘நாதன் நாமம் நமச்சிவாயவே’ எனக்கூறுவதையும் இங்கு நினைவில் கொள்ளவும்.

ஆக பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு (ஒலிக்கு) மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.

அடுத்து, வெளிச்சத்தை ‘சோதி’ எனக் குறிக்கலாம்.

முதலில் வெட்டவெளி மட்டுமே இருந்தது, அந்த வெட்டவெளியில் உண்டான அசைவில், அதாவது, அந்த பெரு வெடிப்பின் போது, எழுந்த ஓசையை ‘ஓம்’ என்றும், அதன் பிறகு வெளிப்பட்ட வெளிச்சத்தை ‘சோதி’ என்றும் அறியலாம்.

அடுத்து, வெட்டவெளிக்குள் நிகழ்ந்த பெருவெடிப்பின் இயக்கத்தின் துவக்கத்தில் வெளிப்பட்ட (சப்தத்தை) ‘ஓம்’ என்ற ‘ஒலி’ யைச் சுட்டி நிற்பவர் ‘விநாயகர்’ ஆவார்.

அவருக்கு வடிவைக்கப்பட்ட வடிவமும் ‘ஓம்’ என்ற அக்ஷரம் போன்றே காணப்படும். விநாயகரின் திருவுருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை கொண்டு வந்து சுழித்தால் ‘ஓம்’ என்ற பிரணவ வடிவம் புலப்படும். அதனால் அவர் நாத முதல்வர் எனப்படுகின்றார்.

அடுத்து, ஒலியைத் தொடர்ந்து உதிக்கும், ஒளியைச் சுட்டி நிற்பவர் ‘முருகன்’ ஆவார். முருகனின் பிறப்பும் சிவனின் நெற்றிக் கண்களில் இருந்து வந்த ஒளியின் மூலமாகவே நிகழ்ந்தது என புராணக் கதைகளில் படித்திருக்கின்றோம்.

ஆகவே, வெட்டவெளியில் இருந்து வெளிப்பட்ட ‘ஒலி’ - யை ‘விநாயகர்’ எனவும், ‘ஒளி’ - யை ‘முருகன்’ எனவும் கொண்டு சமயம் வழிபடுகின்றது.

ஆதிநடு அந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் பந்தம் தண்ந்த பரஞ்சுடராய் எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். சோதிப்பிழம்பதோர் மேனியாக எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

‘சிவசக்தி’ என்பது, இந்த மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்ற இயக்க ஆற்றலை சிவன், சக்தி எனவும், அந்த சிவசக்தியிலிருந்து வெளிப்பட ‘ஒலி’, ‘ஒளி’ ஆற்றல் களை அவர்களின் இரண்டு குழந்தைகளாக ‘விநாயகர்’, ‘முருகன்’ எனவும் அறியாமையில் உள்ள பாமர மக்களுக்காக சமயம் வடிவமைத்துக் கொடுத்தது.

நாம் நம் அறியாமையினால், அந்த வடிவமைக்கப்பட்ட உருவங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, அந்த உருவங்களுக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கின்ற உண்மையான ‘இருப்பு’ எது என்பதை அறிய மறுக்கின்றோம்.

இந்த ‘இருப்பு’ என்பது, வழிபடுகின்ற கற்சிலைகளில் மட்டும் இல்லை. படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருள்களிலும், உயிர்களிலும் உள்ளேயும், வெளியேயும் இருக்கின்றது. அதை எப்பொழுது நாம் உணருகின்றோமோ, அப்பொழுதே நாம் நம்மை அறிந்தவர்களாகின்றோம்.

இதை விடுத்து, சிவன், சக்தி, விநாயகர், முருகன் எனும்போது, அதனை ஆற்றல்களாக புரிந்துக் கொள்ளாமல், ஆட்களாகப் புரிந்துக் கொள்ளும் அபக்குவ நிலையே, தன்னை அறிவதற்குத் தடையாக இருக்கிறது.

வெட்டவெளியின் ஓரிடத்தில் திடீரென நிகழும் அசைவு அல்லது விரிவே பிரபஞ்சத் தோற்றத்துக்கான அடிப்படை நிகழ்வு எனும் பொழுது, அவ்வாறு நிழந்த அந்த அசைவு படைக்கப்பட்ட அனைத்திலும். இருக்கின்றது.

அந்த அசைவை ‘இயக்கம்’ என்று விஞ்ஞானம் கூறுகின்றது. அந்த அசைவை ‘உயிர்’ என்று மெய்ஞ்ஞானம் கூறுகின்றது. இதுதான் வித்தியாசம்.

அந்த உயிரின் ‘இருப்பை’ படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளிலும் உற்று கவனித்தால், அதை நாம் உணரலாம்.

விஞ்ஞானத்தை ‘அறிவு’ எனக் கொண்டால், மெய் ஞானத்தை ‘அனுபவம்’ எனக்கொள்ளலாம்.

விஞ்ஞானம் தான் கண்டறிந்த அறிவை தனிப்பட்டதாக மாற்ற முயல்கிறது. அந்த அறிவை, அனுபவத்தைப் பொதுப்படையானதாக உணரச் செய்வது மெய்ஞானம்.

பொருளைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு வேண்டுமானால், புறத்தில் வளர விஞ்ஞானம் அவசியமானதாக இருக்கலாம். அருளைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு, அகத்தில் வளர மெய்ஞானம் அவசியம்.

ஒருவனை அவனிலிருந்து விடுவித்து, வெட்டவெளியில் சிறுதுகளாக உணரச் செய்வதே உண்மையான மெய்ஞானம் ஆகும். மற்றவைகள் எல்லாம் எப்படிப்பட்ட புனிதமான விசயங்களைப் புரிய வைத்தாலும், அவைகள், அவனைப் பந்தப்படுத்துகின்ற பொய்ஞானம் ஆகும்.



@@@@@ ஓம் தத் சத்! @@@@@

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

அறிவும் அறியாமையும்





மூன்று காலங்களையும் முக்கியமாகக் கருதுகின்ற மனிதன் எப்பொழுது எனக்கு நல்ல காலம் வரும் என்று அடிக்கடி ஜோதிடர்களை சந்தித்து சந்தேகம் கேட்கின்றான்.

மனித வாழ்க்கையின் தலையெழுத்தே, அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என நம்மில் பலர் அசட்டுத்தனமாக நம்பிக்கையும் கொள்கின்றனர்.

அதன் காரணமாக, ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் விடாமல் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு ஜோதிடர்களின் இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்குமாக இங்கும், அங்கும் அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

காலம் மனிதனை அலைக்கழிக்கிறதா? அல்லது காலமெனும் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு, மனிதன் அலைந்துக் கொண்டிருக்கிறானா?

உண்மையில் காலமென்ற ஒன்று தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயக் கண்ணாடி அது.

தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரியைப் போன்று அந்தக்கண்ணாடியில் தெரியும் நம் பிம்பத்தைக் கண்டு நாமே பயப்படுகின்றோம்.

ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.


அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் (Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.

ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.

முதலில் காலம்தான் (Time) மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதாவது, ஒரு மனிதனால் காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக் கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி விட முடியாது.

காலமும், தேசமும் நம் அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.

அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது. அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட முடியாது.

மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை (Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.


*****

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மெய் அறிவு




                                        மெய் அறிவு’ புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.

இந்த நூலின் தலைப்பு மெய் அறிவு என்பதாகும். அதாவது, இங்கு மெய் என்பதை தமிழ் மொழியில் ‘உடல்’ என்றும், ‘உண்மை’ என்றும் இரண்டு விதங்களில் அர்த்தங்கள் கொள்ளலாம்.

இங்கு அறிவுஎன்று கூறப்படுவது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கின்றது. அதையே நாம் ‘இறைவன்’ என்கின்றோம்.

இந்த அறிவு என்ற ஒன்று மட்டுமே அனைத்து உயிர்களின் உள்ளேயும் அந்தர்யாமியாக இருந்து, அவைகளை இயக்குகின்றது.

படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும், ஓரறிவு படைத்த ஒரு செல் உயிரியான ‘கொரோனா’ முதல், ஆறறிவு படைத்த பல செல்கள் உயிரியான ‘மனிதன்’ வரை, உடல் என்ற உபாதியைப் பொருத்து அறிவால் மாறுபடுகின்றது.

இதில், மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உடல்’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனில், அவனது புரிதல் உடல் சார்ந்த அறிவாக மட்டுமே தனித்து நின்று விடுகின்றது. அதே மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உண்மை’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனின், அவனது புரிதல் உண்மை அறிவான இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

ஒரு வகுப்பறையில் படிக்கின்ற பல மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒரே மாதிரியாகத்தான் பாடங்களை நடத்துகின்றார். ஆனால், அந்த மாணவர்களுக்குள் அதை புரிந்துக் கொள்கின்ற அறிவில் வித்தியாசம் இருப்பதினால், ஒருவன் அந்த பாடங்களை ஒழுங்காக புரிந்துக் கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக இருக்கின்றான்.

ஆனால், அதே வகுப்பறையில் படிக்கின்ற மற்ற சில மாணவர்களோ, அதே பாடங்களை சரியாக புரிந்துக் கொள்ளாததினால், குறைந்த மதிப்பெண்கள் பெற்று, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களாக இருக்கின்றனர்.

அதாவது, அவரவர்கள் புரிந்துக் கொள்வதை வைத்து, அவர்கள் ‘அறிவு’ இருக்கின்றது.

இதுப்போன்றே, இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உண்மை’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘ஞானி’ என்று அழைக்கப்படுகின்றான்.

இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உடல்’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘அஞ்ஞானி’ என்று அழைக்கப் படுகின்றான்.

இங்கு புரிதல்தான் வித்தியாசம்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்