சனி, 17 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்




இந்த நூல் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்த விருத்தி நிரோத: (योगश्चित्तवृत्तिनिरोधः) என்ற யோக சூத்திரம் நூலினை தொகுத்து எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும்படி இங்கு கொடுக்கப்படுகின்றது.

இதனை கற்று சாதகர்கள் சித்த சுத்தி அடைந்து சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கண்டு சிவமயமாக கடைத்தேற வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே ஸ்ரீ பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற யோகக்கலையின் மகத்துவத்தை மக்களுக்காக அருளியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் ராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம்.

இவைகள் ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே. 

கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாதது போல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.
 

சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம்.
ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேலை செய்து கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வுடைய நிலையில் - எப்பொழுதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம்.

அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு முறையோ, பயிற்சியோ அல்ல.

அது நித்தியமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு காரியம்.

பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது அது. 

ஆனாலும், நடைமுறையில் யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்து கொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அறியாமல், சில குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேஷ முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் யோகத்தைப் பயன்படுத்துகிறோம். 

இந்த யோகத்தை பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சிக்கு உரித்தானது என்று மட்டுமே கருதியதால், இன்று மக்களிடையே பல யோகா கற்றுக்கொடுக்கின்ற நிறுவனங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களிடையே புதுமையான முறையில் பல புதிய முறைகளைக் கற்றுக் கொடுத்து பணம் பார்க்கின்றனர்.

யோகம் எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு, சேர்க்கை அல்லது இணைதல் என்றுதான் பொருள்.

யோகம் என்றால் இணைதல் என்பதை யாரும் அறியத் தயாராக இல்லை. அதை அறிந்துக் கொண்டால்தானே எதை எதனுடன் இணைப்பது என்ற அடுத்த சந்தேகம் உண்டாகும்? இன்னும் ஒரு சிலரால், இங்கே யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் இந்த யோக சாஸ்திரத்தை சூத்திர வடிவில் கொடுத்துள்ளார்.

இதில் 197 சூத்திரங்கள் உள்ளன.

இவைகள் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

முதல் அத்தியாயம் சமாதி பாதம் என்றும், இரண்டாவது அத்தியாயம் சாதன பாதம், மூன்றாவது அத்தியாயம் விபூதி பாதம்.  நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம் என்பனவாகும்.

இங்கு பாதம் என்பது பகுதிகளைக் குறிக்கின்றது. முதல் இரண்டு பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதில் விபூதி பாதம் பகுதியில் யோகத்தைப் பயன்படுத்தி மனதை கையாளு கின்றவர்களுக்கு சில சித்துக்கள் கிடைக்கின்றன என்பதை அந்தப்பகுதி விளக்கமளிக்கின்றது.

இதில் ஸ்ரீ பதஞ்சலி முனிவர் எச்சரிக்கையையும் கொடுக்கின்றார். இந்த சித்திகள் எல்லாம் மோக்ஷத்திற்கு தடை என்றும் கூறுகின்றார். இறுதியில் உள்ள கைவல்ய பாதம் கிடைக்கும் பலனை கூறுகின்றது.

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார்.

மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.

மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது.

தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவி யாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய் பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப் பவனுமாக (போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது.

இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகின்றார்.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12 - ஆம் நூற்றாண்டிலிருந்து 19 - ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் மக்களிடையே வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19 - ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று, மீண்டும் மக்களிடையே வழக்கத்திற்கு வந்தது என்பதை டேவிட் கோர்டன் என்ற வெளி நாட்டினர் நம் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

20 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்  மட்டும் அல்லாமல் பல்வேறு யோகங்களான, குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹட யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன.

20 - ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் ஸ்ரீ பதஞ்சலி முனியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தை மக்களிடையே பெற்றுத் தந்தனர். 

யோக சூத்திரத்தில் மனதை கையாளும் சூக்ஷுமம் உடைக்கப்படுவதினால், அத்வைத வேதாந்திகளும் இந்த நூலைக் கற்கின்றனர்.

ஆகவே, அனைத்து ஆன்மீக ஆத்ம சாதகர்களும் இந்த கலையைக் கற்று பயனுற வேண்டும் என்ற ஆர்வத்தில் அடியேனும் எளிய தமிழில் இதைத் தொகுத்துள்ளேன்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே. -
திருமந்திரம்

அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர்கள் ஆவார்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் இச்சையை விட்டொழித்தவர்கள் இந்த ஜீவன் முக்தர்கள்..

ஆகையால் இவர்கள் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள். இப்படிப் பட்டவர்களின் மனம் பரவெளியில் பரம்பொருளோடு இரண்டறக் கலந்து எப்பொழுதுமே ஆனந்த நடனத்தில் களித்திருக்கும்.

நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 2)



      
      இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து,   பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, ஸ்ரீ திரிபுர ரகசியம் என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.

இந்த நூலில் பத்து அத்தியாயங்களில் சத்சங்க மகாத்மியத்தை விளக்கும் பொருட்டு, ஹேமசூடோ பாக்கியானமும், ஜகத்தின் உண்மையை விளக்கச் சைலலோகாக்கியான மென்று மூன்று அத்தியாயங்களும், ரிஷிகளுக்கு சாக்ஷாத் வித்யாதேவியே பிரத்யக்ஷமாகி அருளிய வித்யாகீதை என்ற ஓர் அத்தியாயமும், ஞானிகளது பெருமைகளை விவரிக்கும் ராக்ஷஸோ பாக்கியானம் என்ற ஒரு அத்தியாயமும், இது போன்று மற்ற நான்கு அத்தியாயங்களும் சேர்ந்து மொத்தம் இருபத்தி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. இந்த ஸ்ரீ திரிபுர ரகசியம் 12000 சுலோகங்களை கொண்டதாக இருக்கின்றது.



பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை படைப்புக்களை படைத்தது போன்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது. 

அதாவது, பிரம்மம் இந்த உலகமாக மாறியது என்பதை - பால் தயிராக மாறியது போன்று, என்று கூறினால் அது தவறு. காரணம், அப்படிக்கூறினால், பால் தயிராக மாறிய பின்பு, தயிர் மட்டும்தான் இருக்குமே தவிர பால் அங்கு இருக்காது.

இதுபோன்று, பரமாத்மா உலகமாக பரிணமித்த பின்பு, அவர் அங்கு இல்லாமல் போய் விட்டார் என்றால் அதுவும் மிகப்பெரிய தவறாகப் போய்விடும். 

அதனால், பரிணாமம் என்பது ஏற்பதற்கு இல்லை. பரமாத்மா தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே, மற்றொரு பக்கம் மாயையால் ஜீவ - ஜகத்துக்களாகத் தோன்றுகிறார்.

"இதெல்லாம் ஒரே சத்வஸ்துவின் தோற்றம் மட்டுமே ஆகும்". 

அதாவது, அந்த வஸ்து போடும் வேஷம்தான்! உதாரணமாக, ஒருவன் ஒரு வேஷத்தை போட்டுக் கொள்கின்றான் என்றால், அவன் அவனாக இல்லாமல் போய் விடுகின்றானா என்ன? அதுபோன்றுதான், இந்த பிரபஞ்சத்தோற்றமே பிரம்மத்தின் வேஷம், கண்கட்டு வித்தை! அது எத்தனை விதமான வேஷங்களைப் போட்டாலும், பாதிக்கப்படாமல் அது அதுவாகவே (சத்வஸ்து ஏகமாகவே) அப்படியே இருந்துக்கொண்டேயிருக்கிறது. 

இதற்கு விவர்த்த வாதம் என்று பெயர்.

ஜீவத்துவம் பூரணத்தன்மை இல்லாமல் இருப்பதால், மோக்‌ஷம் என்ற பூரணத் தன்மையை அடையவேண்டும் என்பதுவும், வேறுபாட்டுடன் கூடிய ஞானமே அஞ்ஞானம் என்றும், அது மாயையின் காரியம் என்றும், மாயை பிரம்மத்தினுடைய பூரணமான சுதந்திர மென்றும் கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும், இதனில், கண்ணாடியில் தெரிகின்ற உருவமும், அதன் பிரதி பிம்பமும் பார்பதற்கு இருவர் போன்று தோன்றினாலும், உண்மையில் ஒருவனே அங்கு பிம்பமாக காணப்படுகின்றான் என்ற பிரதிபிம்ப திருஷ்டாந்தத்தை அங்கீகரித்து ஜீவ, ஈஸ்வர ஒற்றுமை விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை கற்கின்றவன் ஒரு காலத்திலும் துக்கத்தில் வீழமாட்டான். பிறப்பு, இறப்பு என்ற நோயிலிருந்து விடுபடுவான். தக்க குருவானவர் சிஷ்யனுக்கு உபதேசம் செய்ததும், யுக்தி அனுபவங்கள் பொருந்தியதும், மிகவும் அரிதான உயர் ஞானத்திற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை என்பதுவும், இந்த நூலைக் கற்று எவனுக்கு ஞானம் உண்டாகவில்லையோ, அவனை பாக்கியம் இல்லாதவன் என்றும் கருத வேண்டும்.

மேலும், அப்படிப்பட்டவனுக்கு சாக்‌ஷாத் பரமசிவனே பிரத்யக்ஷமாக தோன்றி உபதேசம் செய்தாலும் அவனுக்கு ஞானம் உண்டாகாது. 

காரணம் அவ்வளவு மகிமை பொருந்திய ஞான காண்டத்தை ஹரிதாயனர் என்ற மகரிஷி அதி அற்புதமாக நாரதருக்கு உபதேசம் செய்கின்றார். 

இந்த திரிபுரா ரகசியம் என்ற நூலை ஹரிதாயன ஸம்ஹிதா என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நூலின் முதல் பதினொன்று அத்தியாங்களை எடுத்து ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞானகாண்டம்) {பாகம் - 1} என்று முதல் பாகமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. 

இது இரண்டாம் பாகமாக இப்பொழுது வெளியிடப்படுகின்றது. அனைத்து ஆத்ம சாதகர்களும் படித்து ஞானத்தை அடைந்து பிறவாமை என்ற பெருநிலையைப் பெற வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம் ஆகும்.




என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

ஓம் தத் சத்!

புதன், 31 ஜூலை, 2019

பிரபஞ்ச மனம்




இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றான். அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய இயல்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையாக இல்லாமல் இருப்பதற்கு, மனம் அமைதியில்லாமல் அலைபாய்வதே காரணமாகும்.

மனதிற்கும், அமைதிக்கும், நெருங்கிய நட்பு உண்டு. அதனால்தான் மனம் சலனமடையும் போது அமைதி பறிபோகின்றது. அமைதி போனவுடன் மகிழ்ச்சி சென்று விடுகின்றது.

மகிழ்ச்சி என்பது மனதின் அடிப்படையில் உருவாகும் விஷயம். மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மகிழ்ச்சி முடிவு செய்யப்படுகின்றது.

மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க விரும்பினால், நம்முடைய செயல்கள் நல்லதாக இருக்க வேண்டும். செயல்கள் நல்லதாக இருக்க வேண்டுமெனில், நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க எண்ணங்கள் நல்லவைகளாக தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் நல்லனவாக தோன்ற அவனது குணம் சத்துவ குணமாக வேண்டும். குணம் சத்துவமாக வேண்டுமானால், அவனது சித் என்ற அறிவு தெளிய வேண்டும், அறிவு தெளிந்தவனுக்கு ஆனந்தம் உண்டாகும். அப்படி என்றும் மகிழ்ச்சி உடையவன் செய்யும் செயலும் சிறப்பானதாக அமையும்.

ஒருவன் செய்யும் செயல்களினால் வருகின்ற நன்மை, தீமைகளை அந்த செயல் செய்தவன் அடைந்தாக வேண்டும் என்பது பிரபஞ்சநியதி.

ஒருவன் எண்ணும் ஒவ்வொரு எண்ணங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், அதில் நல்லது, கெட்டதை பிரித்து அறிய முடியும். நல்லது எது?, கெட்டது எது என்பதை அறிந்து செயல் செய்பவன், தன்னுடைய செயலில் முடிந்தவரை கெட்டதை தவிர்க்க நினைப்பான். நல்லதை நடைமுறைப்படுத்துவான். அந்த நல்ல செயலின் விளைவாக கிடைக்கும் பலன்களும் நல்லதாக இருக்கும்.

பலன்கள் நமக்கு நல்லதாக இருந்தால்தான், நாம்  நிலையான மகிழ்ச்சியையும் அடைய முடியும்.
இந்த புத்தகத்தின் வாயிலாக நிலையான அந்த மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும் வழிமுறைகளை கூறி, மனம் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகின்றது என்பதை, ஒரு பாமரனும் படித்து பயன் அடையும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

ஆத்மாவை அறி!



ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி |
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை, சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை, மின்னல் ஒளிர்வதில்லை. 

இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்?

ஒளிர்கின்ற அறிவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் பிரகாசத்தால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது சாதாரண கண்களால் காணக்கூடிய ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.

அனைத்தையும் காண ஒரு விளக்கின் வெளிச்சம் தேவை.

சூரியனைக் காண விளக்கு தேவையா?

தேவையில்லை.

ஏனெனில் சூரியனின் பிரகாசத்தால்தான் அனைத்தும் ஒளிர்கின்றன.

அதுபோல, அறிவின் பிரகாசத்தால் நாம் அனைத்தையும் காண்கிறோம்.

உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்ற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது அறிவுப் பிரகாசத்தால்தான்.

எனவே ஆன்ம (அறிவு) ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது, அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம். 

ஆனால் உண்மை அதுவல்ல.

பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி. அல்லது அறிவுப் பிரகாசம் என்பது.

அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளி என்ற அறிவுப் பிரகாசத்தால்தான்.

இந்த ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல.

அதாவது, பௌதீக ஒளி அல்ல. ஒரு அனுபவம்!

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்.

இது உணர வேண்டியது. உணர்ந்து அனுபவிக்க வேண்டியது.

மற்ற புறக் காட்சிகள் போல அதனைக் காண முடியாது.

அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது, அனுபவிக்கவே முடியும்.

அதுப்போல, ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது.

இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு என்னுடைய (அறிவுக்கண்) தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று கூறுகிறார். (கீதை, 11.8)

அந்த அறிவை (ஆத்மாவை) அறிவது எப்படி?

வித்யா கீதை




எதனைக் கேட்பதால் சம்சாரக் கடலில் இருந்து சுலபமாக கரையேறுவார்களோ, பஞ்ச பூதங்களும், ஈரேலு பதினான்கு உலகங்களும், கடல்களும், மலைகளும், தேவர்களும், அரக்கர்களும், ரிஷிகளும் மற்றும் அனைத்து அசையும், அசையா பொருட்களும், கந்தர்வர்களும், பிரதம கணங்களும், நாகர்களும் எல்லோருமே எனது அம்சங்கள் ஆகின்றனர். ஆதியில் பிரம்மா முதலான தேவர்கள் எல்லோருமே என் உருவத்தைக் காண விரும்பியவர்களாக எனக்குப் பிரியமான மந்தர மலையை அடைந்து, தேவர்கள் கைக்கூப்பியவாறு, என்னைத் துதி செய்தவர்களாக நின்றார்கள்.

இத்தகைய தேவர்கள் முதற்கொண்டு அனைத்துமாக இருக்கின்ற ஸ்ரீ திரிபுரையின் உபதேசத்தால் வெளிப்பட்ட இதனை வித்யா கீதை என்று அழைக்கப்படுகின்றது.

தினம் இதனைப் பாராயணம் செய்து வருபவர்களுக்கு பாவங்கள் அனைத்தும் நாசமாகும். உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தினமும் வாசித்து (படித்து) வருபவர்களுக்கு வித்யா தேவி இருமைகளை அழித்து, பூரண ஞானத்தை வழங்குகின்றாள்.

சம்சாரக் கடலில் இருந்து கரையேற இதுவே சிறந்த (தோணி) படகு.

18 – ல் புதைந்திருக்கும் இரகசியம்


பகவத் கீதை
<<<<<<>>>>>>>

அத்தியாயம் - 18, ஸ்லோகம் - 18.
**********************************************

கர்மமும், ஞானமும்.
=====================

ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥


ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோத³நா | 
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித
: கர்மஸங்க்³ரஹ: || (18- 18)


அறிவு, அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா என்று மூன்று விதங்களும்
 கர்மத்தின் கட்டமைப்பு ஆகும்.

___________________________________________________________________


அறிவு, அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.

கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் கட்டமைப்பு இந்த மூன்றும் சேர்ந்தது.


அறிவு (கருவி) - புத்தி.

அறியப்படும் பொருள் (செய்கை) - புலன்கள்.

அறிபவன் (கர்த்தா) - மனம்.


இந்த கட்டமைப்பைக் கொண்டு கர்மாவை நமக்கு வெளியே செய்தால் என்ன நடக்கும்,  நமக்கு உள்ளே செய்தால் என்ன நடக்கும் என்பதை அறியலாம்.


ஒருவன் தன்னுடைய வெளி நோக்குப் பார்வையால் புறத்தே காணுகின்ற காட்சியில்,


இதில் அறியப்படும் பொருளாக புலன் ஒரு ஆப்பிளை சுவைத்து, அறிபவனாக (மனது), அதனை அனுபவித்து, அறிவு என்ற கருவியைக் கொண்டு, தீர்மானம் செய்தவுடன் மனம் திருப்தி அடைகின்றது.


மனம் இந்த ஆப்பிளை பற்றியதால், தின்பதற்கான செயலைச் செய்கின்றது.


இதுவே, கர்மா அல்லது செயல் எனப்படுகின்றது.
இந்த செயல்கள் மனம் எதை எதையெல்லாம் பற்றுகின்றதோ, அந்த பற்றுதலுக்கு ஏற்ப செயலைச் செய்யத் தொடங்கி விடுகின்றது.


இது மனதின் புறப் பார்வையால் விளைகின்றவை.


இது அஞ்ஞானிகளின் நிலை.


அடுத்து, ஒருவன் தன்னுடைய உள் நோக்குப் பார்வையால் உள்ளே காணுகின்ற காட்சியில்,


இதில் அறியப்படும் பொருளாக உள்ள புலன்களை அடக்கி, அறிபவனான ஆழ் மனதை உள் நோக்கி விசாரித்து, அதன் வாயிலாக அறிவு என்ற கருவியைக் கண்டு கொண்ட மனம், அதைப் பற்றியவுடன் உண்டாகும் அனுபவே ஆத்ம அனுபவம் எனப்படும்.


இந்த அனுபவத்தை அடைந்த மனம் திருப்தி அடைகின்றது.


இனி மனதிற்கு தேடுதல் வேலை இல்லை.


எதை அறிந்து கொண்டால் வேறு எதையும், அறியத் தேவை இல்லையோ, அதை அறிவதே அறிவு


என்று அறிந்து கொண்ட மனம் அமைதியாக தன்னை அறிவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடும்.


அதாவது, அறியப்படும் பொருளாக ஆத்மாவை அறிபவன் (மனது), அதனை தன் சொரூபமாக அறிந்தவுடன் அங்கே பற்றுவதற்கு ஆத்மாவைத்தவிர எதுவும் இல்லாததினால், மனம் ஆத்மாவை அறிந்து கொள்கின்றது.


இதுவே, ஞானம் அல்லது ஆத்ம நிஷ்டை எனப்படுகின்றது.


இது மனதின் அகப் பார்வையால் விளைந்தவை.


ஆகவே, புறப்பார்வை என்பது ஊனக்கண்ணினால் உண்டாகி, ஆசையின் காரணமாக கர்மாவில் ஈடுபட வைக்கின்றது.


அதுவே அகப்பார்வை என்பது மனக் கண்ணினால் உண்டாகி, ஆத்மாவை அறிந்து அங்கே செயல் எதுவுமற்ற ஆத்ம அனுபவம் உண்டாகின்றது.


இங்கு செயல் இல்லை. ஞான அனுபவம் மட்டுமே!


இதுவே சாரம்!

ஆகவே,


புறத்தில் பார்த்து கர்மாவை சேர்த்துக் கொள்ளலாமா?

(அல்லது)

அகத்தில் பார்த்து ஆத்ம ஞானத்தை அனுபவிக்கலாமா?


என்பதை அவரவர்களின் மனதின் சம்ஸ்காரத்தைப் பொருத்து முடியுமா?, முடியாதா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.


ஓம் தத் சத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்