புதன், 27 ஜூலை, 2022

அகத்தில் அறிவதே அறிவு!


அகத்தில் அறிவதே அறிவு!

====================
        உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன என்று திருமூலர் கூறுகின்றார்.
        அவை சதா புறத்தே சென்று புறப்பொருள்களைப் பற்றிய விஷய ஞானத்தைச் சேகரித்து உடலிடம் வைப்பதாகக் கூறுகின்றார்.
"அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்தும் அஞ்சுக மேபுகும்".
        உடலைச் சார்ந்த கருவிகளை மதம் பிடித்த யானைகளுக்குத் திருமூலர் பெருமான் ஒப்பிடுகின்றார்.
        யானைகளுக்கு மதம் பிடிக்கும்பொழுது, அவைகளை ஊருக்கு வெளியே உள்ள, மக்கள் நடமாட்டம் இல்லாத, கோட்டைப் பகுதியிலே விட்டுவிடுவார்கள்.
        அதேபோன்று, மனிதனின் புற இந்திரியங்கள் புறப்பொருள்கள் மீது நாட்டம் கொண்டு செல்ல முயலும்போது, அவற்றை அவனது அறிவால் அடக்கி வைக்க முயற்சிக்கிறான்.
        ஆனால், அவைகள் அவனிடமிருந்து தப்பி ஓடி வெளியே வந்து விடுகின்றன.

        அவைகள் உடம்பையே அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன என்றும் திருமூலர் பெருமான் கூறுகிறார்.
        மேற்கூறிய அறிவைத் தவிர வேறு எத்தகைய அறிவும் இல்லை என்று மனிதனின் உள்ளத்திலே ஓர் எண்ணம் எழுவதும், அந்த அறிவின் விளைவே என்பதை அவன் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
        உண்மையில் வேறு ஒரு அறிவு உள்ளது.
        நாம் இப்பொழுது புறத்திலிருந்து பெற்றுள்ள அறிவைச் சிற்றறிவு என்றும், அகத்திலுள்ள அறிவைப் பேரறிவு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
        அத்தகைய புறத்திலிருந்து பெற முடியாத, அகத்திலுள்ள பரம்பொருளைப் பற்றிய அறிவு முழுமையான அறிவு எனப்படும்.
        நாம் கருவி கரணங்களைப் பயன்படுத்திப் பெறும் அறிவு பகுதி அறிவாகும்.
        விஞ்ஞான அறிவு மனிதனுக்குக் கொடுக்கும் அறிவு பகுதி அறிவுதான்.
        ஒரு பொருளைப் பற்றி ஒருவன் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே போனால், அந்த விசாரணையின் வழியாக அவனுக்குப் பற்பல அறிவு கிட்டலாம்.
        ஆனால், இத்தகைய அறிவு உடலுடன் இயங்கும் கருவி கரணங்களின் வழியாகப் பெறப்படும் அறிவாகையால் இது இடம், காலம் முதலியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது.
        நான் என்கிற தன்முனைப்பின் அழுத்தத்தால் வெளிப்படும் அறிவின் திறம் மனிதனிடம் குறைந்த ஆற்றலையே பிரதிபலிக்கும் தன்மையுடையது.
        முழு அறிவு என்பது ஒரு மிகப்பெரிய வட்டமாகும். பகுதி அறிவு இந்த வட்டத்தில் எங்கோ ஒரு சிறிய பகுதியை இடம் கொண்டதாகும்.
        சிற்றறிவு என்றுமே முழுமையான அறிவாகாது. அதே நேரத்தில் முழு அறிவாகிய பெரிய வட்டம் சிற்றறிவுப் பகுதிகளைத் தன்னுள் அடக்கி நிற்கும்.
        முழு அறிவாகிய பெரிய வட்டத்தின் தன்மையை மாற்ற முடியாது. அது நிலையான தன்மை பெற்றது. சிற்றறிவுப் பகுதிகளின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும்.
        அதையே விஞ்ஞான வளர்ச்சி என்கிறோம்.
        விஞ்ஞான அறிவு வளர வளர மனிதன் முன்பு பெற்றிருந்த அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் புதிய உண்மைகளைச் சேகரித்துக் கொள்கிறான்.
        ஆனாலும் இவ்வாறு மனிதன் பெறும் அறிவு முழுயைமான அறிவாறகாது.
        அந்த மனிதனை ஒரு மயக்கத்திலே ஆழ்த்தும்.
        அத்தகைய அறிவின் வளர்ச்சி ஆற்று வெள்ளத்தோடு போகும் பொருட்களைப்போன்று, அவனைக் கட்டுக்கடங்காத நிலைக்கு அழைத்துச் செல்லும்.
        இந்த அறிவைப் பெறுவதும், இந்த அறிவினால் இன்பத் துன்பங்களை அநாதி காலம் முதல் தாங்கி அனுபவிப்பதும் உயிராகும்.
        உயிர் அறிவுடைய பொருள்தான்.
        ஆனால், அதனுடைய அறிவாற்றல் சிறியது. ஐந்து இந்திரியங்கள், ஐம்புலன்கள் உட்கருவிகள் போன்றவை இல்லாத இடத்தில் உயிரின் அறிவாற்றல் இயங்குவதற்கு வழியே இல்லை.
        உயிரினுடைய அறிவாற்றல் வட்டம் மிகவும் சிறியது. ஆனால், பேரறிவாகிய இறைவனின் வட்டம் மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிகவும் பெரியது.
        இதை உணரும்பொழுது மட்டுமே, மனிதன் எல்லாமே என்னுடைய அறிவு, எனது அறிவின் சாதனையே சாதனை என்றெல்லாம் இறுமாப்படைவது அவனது சிறுமையை எடுத்துக்காட்டுகிறது.
        மனிதனே எல்லா அறிவுக்கும் சொந்தக்காரர்கள் என்பது ஒரு பெரிய வேடிக்கை அல்லவா என்கிறது திருவருட்பயன்.
"பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக் (கு)
அறி (வு) என்ற பேர்நன் (று) அற".
        பேரறிவினைப் பற்றித் தம்முள் உணர்ந்துக்கொண்ட அருளாளர்கள் இத்துடன் நிற்பதில்லை.
        முழுமையான அறிவே உண்மையான அறிவென்றும் மற்றதெல்லாம் அறியாமை என்றும் கூறுகிறார்கள்.
        ஏனெனில், உடலின் கருவி கரணங்களைப் பற்றி மனிதன் பெறும் அறிவு உடலையே சார்ந்திருக்கும்.
        ஆகையால் உடலைப் பற்றிய அறிவு பரம்பொருளைப் பற்றிய அறியாமை நிலைக்கு மனிதனைத் தள்ளி விடுகிறது.
        அதாவது, தனக்கு வேண்டிய ஒன்றைப் பார்க்கும்பொழுது மற்றதைப் பார்க்க, உள்ளத்திலே ஆவல் எழும்பாது.
        அந்த அறிவு பாசத்தோடு சம்பந்தப்பட்ட அறிவாகும்.
        அதாவது, உயிரைச் சார்ந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்கள் அந்த அறிவுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கின்றன.
        மனித மனம் அந்த உருவத்திலே ஈடுபட்டு விடுகின்றது.
        உருவம் எத்தகைய மூலப்பொருளினால் செய்யப்பட்டிருக்கின்றது என்று அறிந்துகொள்ள அங்கு ஆவல் எழுவதில்லை.
        ஆகவே, உருவத்தைப் பற்றிய அறிவு ஒரு அறியாமையாகும்.
        யானைப் பொம்மையைப் பார்க்கும் ஒரு குழந்தைக்கு அது மரத்தால் செய்யப்பட்டுள்ளது என்கிற உணர்வு தோன்றுவதில்லை.
        அவ்வாறே, பல தங்க ஆபரணங்களைப் பார்த்து அதிசயப்பட்டு நிற்கும்        பெண்மணிக்கு அவற்றின் மூலப்பொருள் தங்கமே என்கிற உண்மை தோன்றுவதில்லை. அந்த அளவுக்கு அவள் அந்த ஆபரணங்களின் அழகில், வேலைப்பாட்டில் தனது மனத்தைப் பறிகொடுத்து விடுகிறாள்.
        உண்மை அறிவின் முன் நாம் பெற்றுள்ள அறிவெல்லாம் அறியாமைதான் என்கிறார் திருமூலர்.
        இந்த அறிவு, அறியாமை ஆகிய நிலைகளுக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அதுவே ஒரு பேரறிவு நிலை. அதுவே, பேரனுபவ நிலையுமாகும்.
        அந்தப் பேரறிவு நிலை சூரியனின் ஒளிப்போல மற்ற எல்லா அறிவு நிலைகளையும், இருளிலிருந்து மீட்டு பிரகாசப்படுத்துகிறது.
        அந்த அறிவு நிலைக்குச் சமமாக வேறொன்றுமில்லை. அது பேரானந்தத்தைக் கொடுக்கும்.

நன்றி! 🙏

Education (கல்வி)




        அறியாமையிலிருந்து விடுபட்டு, அறிவாய் தன்னை அறிவதே “அறிவு” அல்லது ஞானம் என்று அறியப்படவேண்டும்.
        இதிலே, அறியாமை என்று எதைக் கூறுவது?
        மனதில் ஏற்றிவைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களையே அறியாமை என்று கூறப்படுகிறது.
        இது என்ன முரண்பாடாக இருக்கிறதே!...
        புறத்திலிருந்து ஏற்றிவைத்துக்கொள்கிற எல்லா படிப்பினைகளும் நமக்கு கற்றுக்கொடுப்பதுதானே “அறிவு” என்றல்லவா நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதனால்தானே அவைகள் அனைத்தையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்கிறோம். அதிலே, அனேக பாடங்களை மனப்பாடப்பகுதிகளாகப் படிக்கவும் செய்கிறோம்.
        அவ்வாறு கற்றவைகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் (இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல், பொறியியல், சட்டம்) பல பட்டங்களை வேறு பெற்றுக் கொள்கிறோம்.
        அதை வைத்துத்தான், நாம் உயிர்வாழத்தேவையான வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வருகிறோம்.
        அதிலேயும், ஓய்வு இல்லாமல் கற்றுத்தருகின்ற கல்விக் கூடங்களை மட்டும்தான் சிறந்த பள்ளிக்கூடம் என்று நாடுகிறோம்.
        அத்துடன், ஆங்கிலம் என்பது வெறும் மொழி அறிவுதான் என்பதை அறியாமல், அவசியம் மெட்ரிக் பள்ளிகளிலேயே நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம்.
        அத்துடன், அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் சரியாகப் படிக்க மாட்டார்கள் எனக்கருதி, அந்த பள்ளியின் விடுதியிலேயே தங்க வைத்து அல்லும், பகலும் அயராது அவர்களைப் படிக்க வைக்கிறோம்.
        அதன்வாயிலாக, அவனோ அல்லது அவளோ ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால், அவன் - அவள் மெத்தப் படித்தப் பட்டதாரி அல்லது அறிவாளி என்று கருதுகிறோம்.
        இதுதானே இன்றைய உண்மை!...
        இதனையெல்லாம் அறியாமை என்றால், ஆக “அறிவு” என்பது என்ன?
        இதுவரை நாம் எதையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறோமோ? அல்லது எண்ணங்களாக ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறோமோ?, அவைகள் அத்தனையையும் அறிவதற்கு, ஆதாரமாக எது? உள்ளதோ, அதை அறிந்துக் கொள்வதே “அறிவு” எனப்படுகிறது.
        அதாவது, “எதை அறிந்துக் கொண்டால், வேறு எதையும் அறியத்தேவை இல்லையோ, அதை அறிவதே அந்த ‘அறிவு’.” என்பதை அறிந்துக் கொள்வதுதான் ‘கல்வி’ எனப்படுகிறது.

                                        🙏                      நன்றி!

தியாகம்



ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேநைகே: அம்ருதத்வமானசு: |

பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜதே யத்யதயோ விசந்தி ||
        மரணமற்ற நிலையை அடைவது என்பது, செல்வத்தினாலோ, கர்ம, காரியங்களான யாக, யஞ்ஞங்களை செய்வதினாலோ, சந்ததிகளாகிய வாரிசுகளினாலோ, அல்லது பொருள்களை மற்றவர்களுக்கு உதவுவதினாலோ இயலாத காரியம்.
        ஆனால், மரணமற்ற பெருவாழ்வைப் பெருவது, “தியாகம்” ஒன்றினால் மட்டும்தான் சாத்தியமாகும்.
        எது? சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானதோ, மனதில் வெளிப்படுகிறதோ, தன்னில் தானாய் பிரகாசிக்கிறதோ, அதையே சாதகர்கள் அடைகிறார்கள் என்கிறது இந்த மந்திரம்.
        இதிலே, “தியாகம்” என்றால் என்ன?
        தியாகம் என்பது வெளிப்பொருள்களைத் துறப்பது என்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
        ஆனால், அப்படியல்ல! உண்மையில் ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களின் தொகுப்பாகிய மனதைத் துறப்பது மட்டுமே “தியாகம்” எனப்படுகிறது.
        அதாவது, மனதின் ஆசாபாசாங்களை தியாகம் செய்யவேண்டும்.
        எப்படி? அதை ஒவ்வொரு எண்ணமாகச் செய்ய இயலுமா?
        எண்ணங்களற்ற மனம் நிர்மலம் அல்லது நிர்குணம் ஆகும்போதுதான், அந்த அறிவு (ஆன்மா) பிரகாசிக்கும்.
        எண்ணங்களற்ற மனம் நடைமுறையில் சாத்தியமாகுமா?...
        பிறகு, அது எப்படி சாத்தியம் ஆகும்?
        அதாவது, ஒருவன் ஒரு செயலை செய்ய முற்படும்போது, மனம் அந்த குறிப்பிட்ட ஒரே செயலில் மட்டுமே, முழுமையாகப் பொருந்தி இருக்குமாறு, அச்செயலைச் செய்ய வேண்டும்.
        அப்போது, மனம் அந்த ஒரே செயலில் முழுமையாக ஒன்றி இருக்கும். மற்றவற்றில் கவனச் சிதறல் ஏற்படாது இருந்தால், அந்த நிலைக்குப்பெயர் ‘இருப்பு’ அல்லது “நிகழ்வு” எனலாம்.
        அத்தகைய மனதின் ஒருமித்த நிலையில், மற்ற தேவையற்ற எண்ணங்கள் எழாதவாறு தவிற்பதையே “தியாகம்” என்கிறோம்.
        இதைத்தவிர்த்து, மனம் கடந்த காலத்திலோ, அல்லது எதிர்காலத்திலோ இருந்தால், அதற்குப்பெயர் ‘ஆசாபாசங்கள்’ அல்லது ‘வாசணைகள்’ அல்லது ‘சங்கல்பங்கள்’ எனலாம்.
        அதாவது, எந்த நிலையில் சங்கல்பங்கள் மற்றும் வினைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகின்றனவோ, அந்த நிலையில் உள்ள முழுமையான சந்நியாஸமே இங்கு “தியாகம்” எனப்படுகிறது.
த+இய+அகம் = தியாகம்.
'த' என்பது 'அந்த' எனப்பொருள்படும்.
'இய' என்பது 'இயல்பாக' உள்ளது என்பதையும்,
'அகம்' என்பது 'உளப் பூர்வமாக' என்பதையும் குறிக்கும்.
        ஆக “தியாகம்” என்றால், ‘இயல்பாக, உளப்பூர்வமாகச் செய்வது’ என்பது பொருள்.
        எதனை? இயல்பாக உளப்பூர்வமாகச் செய்வது?
        அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் மனதை, நிகழ்காலத்தில் நிற்கச் செய்து, செய்கின்ற செயலை அக்கணத்தில் சிறப்பாகச் செய்தால், அதன் காரணமாக, மனதில் உதிக்கும் மற்ற எண்ணங்கள் தவிற்கப்படும்.
        அவ்வாறு, நிகழ்காலத்தில் நினைவைத் துறத்தலே “தியாகம்” என்று அறியப்படவேண்டும்.
        ஆக, இந்த மனம் என்கிற மாயையைத் துறக்கின்ற தியாகத்தினால் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறமுடியும் என்கிறது சாஸ்திரம்.

                    நன்றி! 🙏

ஈஸ்வரன் - ஜீவன்


        ஈஸ்வரன், மாயை, ஜீவன் மற்றும் ஆத்மா எனக்கூறி, இவைகளெல்லாம் ப்ரஹ்மத்திற்கு வேறாக இல்லை என்று மனம் ஏற்றுக்கொண்டாலும், அந்த மனம் அதிலேயே, திடமாக இல்லாதற்குக் காரணம், ஆத்மாவானது மாயையுடன் சேர்ந்துதான் ஈஸ்வரன் ஆகிறது, என்றும், அந்த ஈஸ்வரன் என்பவன் மாயை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதே ஆகும்.
        அதாவது, ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பம் சத்வ குணத்திலே பிம்பிக்கும் போது, அது ஈஸ்வரன் என்றும், ரஜோ குணத்திலே பிம்பிக்கும்போது, அது ஜீவன் என்றும், தமோ குணத்திலே பிம்பிக்கும் போது, ஆவரணம் - விக்ஷேபம் என்ற இரண்டு சக்திகள் வெளிப்பட்டு, ஜீவர்களுக்கு தன்னை அறிந்து கொள்ள முடியாதவாறு மறைப்பையும், த்வைதங்களுடன் கூடிய ஜகத்தையும் தோற்றுவித்துக் கொள்கிறது என்றும் சாஸ்திரம் சுட்டிக்காட்டுகிறது.
        இதிலே, பரஹ்மம் ஒன்று மட்டுமே உள்ளபோது, அதற்கு வேறாக, அது தன்னை பிரதி பிம்பித்துக்கொள்ள மற்றொன்று எங்கிருந்து வந்தது?...
        அதாவது, ப்ரஹ்மம் ஒன்றே! அதற்கு வேறாக எதுவுமே இல்லை.
        அப்படியானால், அது எதில் பட்டு பிரதிபிம்பிக்கிறது?
        அதாவது, ஒன்றேயாகிய ப்ரஹ்மம் தன்னுடைய சக்தியின் மூலம், (எவ்வாறு ஒரு சிலந்தி பூச்சி தனக்கு வேறாக எதையும் எதிர்பாராமல், தன்னிடம் உள்ள எச்சில் மூலம் வலையை உண்டாக்கி, அந்த வலையிலேயே அங்கும், இங்கும் நகர்ந்து விளையாடுகிறது. அதுப்போல), மனதைப் படைத்து, அதிலே மூன்று குணங்களை உண்டாக்கி, அந்த குண பேதங்களின் வாயிலாக ஈஸ்வரனையும், ஜீவனையும் படைத்துக் கொள்கிறது.
        இதிலே, ஈஸ்வரனும், ஜீவனும் ஒரே த்வைதம்.
        ஆனால், ஆத்மா (ப்ரஹ்மம்) ஒரே அத்வைதம்.
        அதனால், ஜீவத்வத்துக்குக் காரணமான மனதையும், ஜீவபாவம் அற்ற ஆத்மாவையும் சம்பந்தப்படுத்தமுடியாமல் இது எப்படி சாத்தியம்? அதெப்படி சாத்தியம்?’ என்று கேள்விகள் எழுகின்றன.
        இங்கேதான் 'ஈஸ்வரன்' வருகிறான்.
        ஈஸ்வரன் எப்படியிருக்கிறான்?
        த்வைதத்துக்கும், அத்வைதத்துக்கும் ஒரு பாலம் போன்று இருக்கிறான்.
        அதாவது, குணாதிசயங்களால் பிரிவினைக்கு உட்பட்டுள்ள மனதை சத்வ குணத்திற்கு உயர்த்தும்போது, ஒன்றையொன்று தொட்டுக்கொள்ள முடியாத த்வைதம் – அத்வைதம் என்ற இருமைகளைக் கடந்து, அத்வைதமான ஆத்ம ஸ்வரூபமாக தன்னை அறிய ஆர்வம் காட்டுகிறது.
        அதற்கு ஆதாரமாக ஈஸ்வரன் உள்ளான்.
        வெளியிலே, த்வைதமான இத்தனை ப்ரபஞ்ச நாடகக் கூத்தும் நடத்துகின்ற ஈஸ்வரன், நம் மனதை மாயா சக்தியின் மூலம் ரஜோ குண கட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்.
        ஆனால், சத்வ குணத்திலே உள்ள ஈஸ்வரன் தன் மனதினால் கட்டுப்பட்டவன் அல்ல.
        ஆத்மாவானது மாயையோடு சேர்ந்துதான் ஈஸ்வரன், ஜீவன் என்ற இருவருமே உண்டாயிருந்தாலும், ஜீவன்தான் மனதிடம் ரஜோ குணத்திலே மாட்டிக்கொண்டு, ஈஸ்வரனை அறிய முடியாத மறைப்பில் இருக்கிறான்.
        ஆனால், ஈஸ்வரன் அப்படி மனதினால் பந்தப்படுத்தப்பட்டவன் அல்ல.
        அவனது இயல்பான குணம் சத்துவம் என்பதினால், இந்த உலக விவகாரங்கள் எல்லாம் திட்டம்போட்டுச் செய்யும் பிரபஞ்சமனதாகிய (Cosmic Mind) ஈஸ்வரன் எதனாலும் பந்தப்படுவதில்லை.
        ஆனால், அறியாமையிலே ஜீவர்களாகிய நாம், ரஜோ குணத்தினால், நான் செய்கிறேன், இது என்னுடையது என்று அஹங்கார, மமகாரங்களினால் மாயை ஆகிய மனதிடம் மாட்டிக்கொண்டு மயக்கத்தினால் பந்தத்திற்கு உட்பட்டு இருக்கிறோம்.
        அதுவே, மாயை ஆகிய ஈஸ்வரனுக்கு, அவனைக் கட்டுப்படுத்தகிற உபாதியாக அவனது பிரபஞ்சமனம் இல்லை.
        காரணம், ஈஸ்வர மனம் தன்னை அறிந்து அதிலேயே (ப்ரஹ்மத்திலேயே) இலயித்து இருக்கிறது.

        அதனால், ஈஸ்வரனால் எதையும் செய்ய முடியும்.

        நம் புத்திக்குப் புரியாததெல்லாம் ஈஸ்வரனுக்கு (பிரபஞ்சமனதிற்கு) சாத்தியம்.
        
        ஜீவ மனதோ, புத்தியோ அந்தக்கரணமோ எப்படி இதைச் செய்ய முடியும்? அல்லது அதைச் செய்ய முடியும்?’ என்று கேள்வி கேட்பது போல, 'ஈஸ்வரன்' எப்படி, எதைச் செய்வான்? என்று கேள்வி கேட்க முடியாது.
        ஈஸ்வரன் மனதினால் கட்டுப்படாதவனாதலால், அவனால், எதையும் செய்ய முடியும்.
        ஜீவன் தன் அந்தக்கரணத்தைக் கொண்டு என்ன முயற்சி செய்ய முடியுமோ, அந்த அளவுக்குத்தான் செய்ய முடியும்.
        அவ்வாறு, அந்த ஜீவன் அறியாமையிலே அனைத்தையும் செய்வதும், அறிவாக தன்னை (ஆத்மாவை) அறிந்துக் கொள்வதும், என எல்லாமே அவன் அருளால் (ஈஸ்வரன்) மட்டுமே சாத்தியம் ஆகிறது.
        அதாவது, ரஜோ குணத்தினால், ஜீவபாவத்தின் உச்சிக்குப் போன ஒருவன் அறியாமையினால், ஆத்மாவைத் தொடமுடியவில்லை என்று கண்டுகொண்டு, சத்துவ குணத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சித்து, ஆத்மானுபவத்துக்குத் தவிக்கும்போது, ஜீவபாவத்தை அழித்து, இந்த்ரிய – மனோ – புத்திகளை இல்லாமல் செய்து, தன்னுடைய உள் ஸ்வரூபமான ஆத்மாவிலேயே ஈஸ்வரன் அந்த ஜீவனை ஐக்யப்படுத்திக்கொள்கிறான்.
        இது, மனம் சத்வ குணத்திலே சதா நிற்கின்ற பொழுது மட்டுமே, மாயை ஆகிய ஈஸ்வரனை கடந்து, மகத்தான அந்த அறிவை (ப்ரஹ்மத்தை) ஐக்கியமாக்கி, அனுபவமாக்கவும் முடிகிறது.

                                                    ஓம் தத் ஸத்!🙏

ஸத்ய தத்துவம்

 

ஸத்ய தத்துவம்

 


ஸத்ய தத்வத்தை மறைத்து த்வைதக் காட்கிகளையும், அநுபவங்களையும் உண்டாக்கும் சக்தியைத்தான் மாயை என்கிறோம்.

     அந்த ஸத்யமான ஆத்ம தத்வத்துக்கு அந்நியமான வஸ்துவே கிடையாதாதலால், இந்தக் காட்சிகள், அநுபவங்கள் எல்லாம் அதனுடைய வேஷங்கள்தான்.

     ஸத்ய தத்வத்தை மறைப்பதை ஆவரணம் என்றும், அந்த ஒன்றையே பல வேஷங்களில் காண்பிப்பதை விக்ஷேபம் என்றும் சொல்வார்கள். 

மாயைக்கு ஆவரணம் - விக்ஷேபம் என்ற இரண்டு சக்திகள் இருக்கின்றன. 

இப்படி மாயாவி போன்று பல வேஷங்கள் போடுபவன்தான் ஈஸ்வரன். 

அதாவது, ப்ரஹ்மமே மாயையோடு கூடி ஈஸவரனாகி, த்வைதங்கள் நிறைந்த இந்த ஜகத்தைத் தன்னிலேயே தோற்றுவித்துக் கூத்தடிக்கிறது. 

அதாவது, ப்ரஹ்மம் என்றால் அது ஆத்மாதான். 

ஜீவனுக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது 'ஆத்மா' என்று கூறுகிறோம். 

ஜகத்துக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது "ப்ரஹ்மம்" என்று கூறுகிறோம். 

இதிலே, ஜீவ மூலமும், ஜகத் மூலமும் ஒன்றுதான். 

அதாவது, ப்ரஹ்மம் ஒன்றிலிருந்தேதான் ஜீவ - ஜகத்துக்கள் தோன்றியிருக்கின்றன. 

ஜீவனுக்கு ஆதாரமான ஆத்மாவுக்கு அந்நியமாக எதுவுமில்லை என்று கூறியபிறகு, ப்ரஹ்மம் மட்டும் அவைகளுக்கு வேறாக இருக்கமுடியுமா? 

ஆக, ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றேதான். 

ஆனாலும், அந்த ஒரே ஸத்ய வஸ்து ஜீவனை மட்டும் குறிக்கும்போது, அது ஆத்மா என்றும், எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜீவராசிகளும், கோடானு கோடி வஸ்துக்களையும் கொண்டதான ஜட ப்ரபஞ்சமும் அடங்கிய ஜகத்தைக் குறிக்கும்போது, ஈஸ்வரன் என்றும் கூறப்படுகின்றது. 

இதிலே, ஆத்மா என்றாலும், ஜீவன் என்றாலும், ஈஸ்வரன் என்றாலும், இந்த நாம, ரூபங்கள் உண்டாக, உள்ளது எதுவோ, அதுவே ப்ரஹ்மம். 

அதுவே ஸத்யம்.

 

 

ஓம் தத் ஸத்!

 

 

மதிப்பு யாருக்கு?

        ஞானி ஒருவர், தன்னிடமிருந்த தங்க மோதிரமொன்றை அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, தூக்கிக்காட்டியவாறு, இது சுத்தமான 22 காரட் தங்கத்தினாலான மோதிரம்.

        இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் யார்? என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார்.

        மக்களின் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.
        பின்னர் அவர் மெழுகுவர்த்தி யொன்றை எரியச் செய்து, குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்தியின் தீச்சுவாலையில் பிடித்தார்.
        சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு, அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது.
        இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.
        அங்கு குழுமியிருந்த அனைவருமே கைகளை உயர்த்தினர்.
        நல்லது!
        நான் செய்வதை "இன்னும் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய ஞானி, தனது கையிலிருந்த மோதிரத்தை கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்து அதை ஒடுக்கினார்.
        பின்னர், அதனை உயர்த்தி பிடித்து, கருகிய, கோணல், மானலாக இருக்கும் இதனைப் பெற விரும்புபவர் யாராவது உண்டா? எனக் கேட்டார்.
        அப்போதும் அங்கிருந்த அதிகமானோர் கைகளை உயர்த்தினர்.
        சரி, இப்போது "நான் செய்வதை பாருங்கள்!" எனக் கூறிய அவர் அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார்.
        அவ்வாறு உருக்குலைந்து போன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர் இனிமேலும், "யாராவது இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.
        அப்போதும், அதன் உருவத்தின் மீது ஆர்வம் கொள்ளாமல், அந்த தங்கத்தின் மதிப்பிற்காக, முன்போலவே பலரும் தங்கள் கைகளை உயர்த்தினர்.
        பின்னர் அவர் அங்கிருந்தவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்:
        அன்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன்.
        பாருங்கள்!
        நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும், நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள்.
        ஏனெனில், நான் கொடுத்த வதைகளினால், இந்த மோதிரத்தின் உருவத்தில்தான் மாற்றம் உண்டானதே தவிர, அதன் மதிப்பீட்டில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை.
        இதைப்போன்றுதான், உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்.
        நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம்.
        அல்லது அடித்து நொறுக்கப்படலாம்.
        இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது.
        ஏனெனில், அப்படி என்ன நடந்தாலும், உங்கள் உண்மையான பெறும் மதிப்பு, ஒருபோதும் குறையாது.
        காரணம், நீங்கள் உண்மையில் இந்த உடலுக்காக மதிக்கப்படவில்லை.
        உங்களிடம் உள்ள உயிருணர்வுக்காகவே மதிக்கப்படுகிறீர்கள்.
        ஆம்! வந்து, தேய்த்து போகின்ற உருவத்திற்கு முக்கியத்துவம் கிடையாது.
        எனவே, உடற்பற்றைக் கடந்து, அந்த உடலுக்கு ஆதாரமான உணர்வுக்குத்தான் உலகில் மதிப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
        ஆகவே, மற்றவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்க மறந்து விடாதீர்கள்!
        மதிப்பு, மரியாதை எல்லாம், அந்த மகத்தான உணர்வுக்குத்தான்.
        உணர்வாகிய உயிர் இல்லாத உடலை யார் மதிப்பார்கள்...?
        ஆக,
        "உணர்வே இறைவன்"
        மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த உணர்வுக்கே உரித்தானது.

                                நன்றி 🙏

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்