திங்கள், 10 ஜனவரி, 2022

மனமும்! குணமும்!


மனமும் குணமும்! ================= மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள் நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா? அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா? எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது. அத்தகைய மனதை அதன் சிக்கல்களில் இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஆன்மீகம் சில அடிப்படை அறிவை மனதிற்கு உண்டாக்க விரும்பி, அதற்கான பல்வேறு பூஜா விதானங்கள், மந்திர ஜெப, தபங்கள், ஆலய வழிபாடுகள், கடவுள்கள், என எல்லாவற்றையும் மனித மனம் பண்படுவதற்காக புகுத்தியது. அவ்வாறு, மனதைச் சீர்படுத்திவிட முடியும் என்றால், மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். அதாவது, சிலப்பயிற்சிகள் மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், அலைபாயும் மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர். உண்மையில், மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும் கானல் நீர் போன்றது. நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? என்றால், அதுவும் முடியாது. இதுதான் மாயையின் மகத்தான விளையாட்டு...!

புதன், 22 டிசம்பர், 2021

உள்ளம் உறங்காது!

 உள்ளம் உறங்காது!


புத்தகம் இங்கு உள்ளது  👈

மனம் என்பது மனிதனை மகத்தானவனாக மாற்றக் கூடிய மகோன்னத உயிர் சக்தியின் வெளிப்பாடு என்பதினால், உயிருள்ள உடலைக்கொண்ட மனிதன் தனக்குக் கிடைத்த மகத்தான மனதைக்கொண்டு, அதில் ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களை பரிசீலித்துப் பார்த்து, அதன் நன்மை - தீமைகள் என்ற இருமைகளை பகுத்தறிகின்ற பொழுதுதான், அவன் மனிதன் என்பதில் இருந்து புனிதன் என்பவனாக உயருகிறான்.

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

அன்பே சிவம்

 அன்பே சிவம்!


புத்தகம் இங்கு உள்ளது  👈

சிவம் என்னும் சொல்லுக்கு நன்மை என்று பொருள்..! 

எங்கும் நன்மை! எதிலும் நன்மை! உள்ளது. 

அதையே எங்கும் சிவம்…! எதிலும் சிவம்…! என்கிறார்கள்..! ஆக அனைத்து உயிர்களிடமும் நன்மையைக் கண்டு, அன்பு செலுத்துவதே சிவ மயமாதல் எனலாம். 

அதனால்தான் பேச்சு வழக்கில் கூறப்படும் வார்த்தை நன்மை உண்டாகட்டும் எனக் கூறவேண்டுமானால், சிவ சிவா என கூறுவது இயல்பு. 

சிவம் என்பதில், சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம் என்ற மூன்று எழுத்துக்களில் சிகாரம் என்றால் - அறிவு என்றும், வகாரம் என்றால் - மனது என்றும், மகாரம் என்றால் - ஆற்றல் அல்லது மாயை என்றும் பொருள்படும். 

அதில், முதல் எழுத்தாகிய சி என்ற அறிவை கொண்டு, என்ற மனதில் குடிகொண்டுள்ள ம் என்ற மாயையை அறிந்து, அதன் வாயிலாக சிவத்தை அறிவதே இங்கு சிவ மயமாதல் எனப்படும்.

புதன், 15 டிசம்பர், 2021

காரண சரீரம்

காரண சரீரம்!
==========
(விளக்கம்)
^^^^^^^^^
இந்த 'நான்' எங்கிருந்து அல்லது எதிலிருந்து தோன்றுகிறது?
என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால், அந்த “நான்” என்ற உணர்வும் அந்த காரண சரீரத்திடமிருந்தே உண்டாகிறது. ஆனால், இதிலிருந்து வெளிப்படுகின்ற “நான்” தனித்துவமான தன்னுடைய ‘நான்’ என்று மனம் நினைத்துக் கொள்வதால், அது, மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் என்ற அடுத்தடுத்த பரிமாணத்தில் சிக்கிக் கொள்கிறது.
இந்த சிக்கலின் காரணமாக ஈஸ்வரனின் காரணத்தேகத்தை தனித்த தன்னுடைய தேகமாகக் கருதிக் கொள்கிறது. ஆனால், உண்மையில் காரணத் தேகம் என்ற ஒன்று, பிரபஞ்ச மனமாகிய “ஈஸ்வரன்” என்பதினால், அதை ‘மாயை’ என்றே சாஸ்திரம் அழைக்கிறது.
அதாவது, ‘மா’ என்றால் ஒடுங்குதல் என்றும், ‘யா’ என்றால் விரிதல் என்றும் பொருள்.
ஆக, இந்த மனம் விரிந்து உலகம் தோன்றுவதற்கும், ஒடுங்கி உலகம் மறைவதற்கும் இந்த காரண சரீரம் என்ற மாயையே காரணம் ஆகும்.
பொதுவாக, மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். அதாவது, இல்லாததை இருப்பதாகக் காட்டி மனதை மயக்குவது “மாயை” எனலாம்.
அப்படிப்பட்ட இந்த காரண சரீரத்தை நிலையானதா?, நிலையற்றதா? என அறிய முடியாததாக இருப்பதினாலும், அதில் புதைந்துள்ள அறியாமைகள் வெளிப்படாத நிலையில் அது விதை (பீஜம்) வடிவாக உள்ள நிலையைத்தான் 'அவ்யக்தம்' என்று சாஸ்திரம் அழைக்கிறது.
அதாவது, காரண சரீரம் வெளிப்படாத நிலையில் அவ்யக்தமாக இருக்கின்றது.
இதுதான் நாம் ஆழ்ந்து உறங்குபோது நிகழ்கிறது.
அதாவது, நாம் உறங்கும்போது, நம்முடைய மனம் மற்றும் உடல் அந்த காரண சரீரத்தில் ஒடுங்கி விடுகிறது. அதாவது, நம்முடைய விழிப்பு நிலையில், இந்த ஸ்தூல சரீரத்தினால், நாம் பெற்ற அனுபவங்கள்யாவும் ஒரு விதையாக, அதாவது, வெளிப்படாமல் அவ்யக்தமாக ஒடுங்குகின்றன.
அதுப்போன்றே, கனவு நிலையில் சூக்கும சரீரத்தினால், நாம் பெற்ற அனுபவங்கள் யாவும் ஒரு விதைப்போன்று அவ்யக்தமாக ஒடுங்குகின்றன. இவ்வாறு ஒடுங்கும் இடமே காரண சரீரம் ஆகும்.
நன்றி! 🙏

 

சனி, 11 டிசம்பர், 2021

ஆடு - சிங்கம் (சிறு கதை)

ஆடு! - சிங்கம்! (சிறு கதை)
^^^^^^^^^^^^^^^^^^^^


கதையில் வரும் இளம் சிங்கம், மூத்த சிங்கத்தைக் கண்டவுடன் “நான் உன்னைப் போன்று சிங்கமாக ஆவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா!...? என்று கேட்டால்....
அதற்கு அந்த மூத்த சிங்கமும் வேடிக்கையாக நீ யோகா பழக வேண்டும், தலைகீழாக நிற்க வேண்டும், நாள்தோறும் பூசைகள் செய்ய வேண்டும், அத்துடன் அனுதினமும் மூச்சு பயிற்சிகளை விடாமல் மேற்கொள்ள வேண்டும், உண்ணா நோன்பு கடைப்பிடிக்க வேண்டும், புண்ணியக் காரியங்கள் செய்ய வேண்டும், அத்துடன், அனைத்தையும் துறந்த துறவியாக வேண்டும்…. முக்கியமாக முடிந்த போதெல்லாம், “நான் சிங்கம்”, “நான் சிங்கம்” என்று ஓயாமல் ஜெபம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
அந்த இளம் சிங்கமும் இவைகளையெல்லாம் உண்மையெனக் கடைபிடித்துக் கொண்டிருந்தால், அவைகள் எல்லாம் வீண் முயற்சியாகிவிடும்.
ஏனெனில், அந்த இளம் சிங்கம் ஏற்கனவே சிங்கம்தான்.
ஆகவே, தன்னை அறிய வேண்டுமானால், இங்கு விழிப்புதான் வேண்டுமே தவிர….!
வீணான பயிற்சிகள் எதுவும் வேண்டியதில்லை!.
நன்றி! 🙏

 

ப்ரஹ்மம் - மாயை


பிரம்மமே இந்த பிரபஞ்சமாக அல்லது இயற்கையாக நம்மால் உணரப்படுகிறது. அதன்மீது பகவான் ஸ்ரீசங்கரர் தன் விளக்கத்தை வெளிப்படுத்தியதுதான் பாம்பு - கயிறு மற்றும் திருக் - திருஷ்யம் போன்ற அத்வைத தரிசனம் ஆகும்.
இதிலே, ஆதி வேதாந்தம் ஒன்றேயான பிரம்மத்தின் துவக்கம் மற்றும் விரிவு போன்ற நிலைகளை இந்த பிரபஞ்சமாக ஏற்றுக் கொண்டது. அதிலே, பிரம்மம் வேறு, பிரபஞ்சம் வேறு என்றாலும், அந்த பிரபஞ்சத்தின் மூலக் காரணம் இந்த பிரம்மம்தான் என்றது.
ஆனால், பகவான் ஸ்ரீசங்கரர் கூறும் அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும், அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின் அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் கூறப்படுகிறது. அதிலே, அந்த அறியாமையை நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது.
ஆக, நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. என்பது இவரது சித்தாந்தம்.
ஆதிசங்கரரின் கயிறும், பாம்பும் பற்றிய நியாயககருத்து கூறவருவது என்னவெனில், ஒரு கயிறு பாம்பாகத் தெரியும் வரை, அது பாம்பாகவே உணரப்படுகிறது.
அவ்வாறு பாம்பாக உணரும் போது, அந்த கயிறானது உண்மையில் பாம்பாகவே உள்ளது.
அதாவது, அது பாம்பாக உள்ளதிலிருந்து சற்றும் மாறவே இல்லை.
ஆனால், அதன்மீது வெளிச்சம் பட்டவுடன் அப்படியே தலைகீழாக மாறி, இதுவரை பாம்பாகத் தெரிந்தது, தற்போது கயிறாகத் தெரிகிறது...!
அதாவது, இரண்டுமே ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன உள்ளது....? எனவே அந்த பாம்பிற்கு ஆதாரமாக கயிறு மட்டுமே அங்கு இருந்தது என்கிறார்.
இதுப்போன்றே, ப்ரஹ்மம் ஒன்று மட்டும்தான் உள்ளது, அதன் வாயிலாக வெளிப்பட்டதுதான் இந்த மாயை என்ற பிரபஞ்சம் என்பதை ஞானம் என்ற வெளிச்சம் வந்தால் மட்டுமே ஒருவன் தன்னை உணர்ந்த உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
நன்றி!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்