செவ்வாய், 24 மார்ச், 2020

எல்லாமே எண்ணங்கள்



நிலையான ஆனந்தத்திற்கு நித்தமும் தடையாக இருப்பது, ‘நான்’, ‘எனது’ என்ற அபிமான எண்ணங்களே என்பதை அறிவதற்கு, இங்கு ‘அறிவு’ அவசியமாகின்றது.

இந்த பிரத்யேகமான ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், அவனால் மட்டுமே இந்த இன்ப, துன்பங்களில் இருந்து விடுதலை அடைவது சாத்தியமாகின்றது.

இவ்வாறு எண்ணங்களை அறிந்த நான் இறப்பதே ‘முக்தி’ எனப்படுகின்றது.

அதாவது,

மனம் இறப்பது முக்தி!
உடல் இறப்பது மரணம்!

இதை அறிவதே இங்கு ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’ எனப்படுகின்றது.

பல்வேறு எண்ணங்களால் சூழப்பட்ட இந்த சூக்ஷுமமான மனம், தன்னால் கற்பித்துக் கொள்ளப்பட்ட இந்த ஸ்தூல உடலை, தன்னை அறியாமலேயே மரணத்தை நோக்கி, அனுதினமும் அழைத்துச் செல்கின்றது என்பதை, இதே மனதால் நான் அறியாமல் இருக்கின்றேன்.

ஆனால், ‘அந்த மரணம்’ இந்த ஸ்தூல உடலுக்கு உண்டாகும் பொழுது, இந்த உடலைச் சார்ந்துள்ள உலகம், உறவுகள், சொத்து, சுகம் என்ற அனைத்தும், எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரத்தை உண்டாக்கி, இறுதியில் என் இறப்பிற்குப் பிறகு இல்லாமல் மறைகின்றது.

அதுவே, ‘அந்த மரணம்’ இந்த சூக்ஷும மனதிற்கு மட்டும் உண்டாகும் பொழுது, அந்த மனம் இறப்பதினால், அனைத்து துயரங்களுக்கு காரணமாக இருந்த அனைத்திலிருந்தும் இந்த மனமும், தன்னைச் சார்ந்தவர்களின் மனதிற்கும் விடுதலையைப் பெற்றுத் தருகின்றது. இந்த மனதின் இறப்பினால், எனக்கும், மற்றவர்களுக்கும் இன்பம் மட்டுமே உண்டாகின்றது.

இதை அறிவதே, ‘ஞானம்’ எனப்படுகின்றது.


வியாழன், 5 மார்ச், 2020

ஆன்ம அனுபவம்


ஆன்ம அனுபவம்



உத்தம ஞானிகள் எப்பொழுதும் தன் சுயத்திலேயே இருப்பதால், மற்றவர்கள் பார்வைக்கு அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடுவது போன்று தோன்றினாலும், அவர்களைப் பொருத்தவரை அவற்றை முயல் கொம்பு போன்று உண்மையற்றது என்று ஒதுக்கி விடுவார்கள்.

ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் பல கதா பாத்திரங்களில், நடிப்பவர்களின் மத்தியில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று, அந்தப் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பார். அது மேடையோடு முடிந்து விடும். அனால், அவரது உண்மை நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதுப்போல,

ஆன்மானுபவத்தில் எப்பொழுதும் நிலைத்துள்ள உத்தம ஞானிகள் செயலும் நடிகர் போன்றதே, அவரும் உலக விவகாரங்களில் நடிக்க வந்தாலும், அதை உண்மையென்று ஏற்றுக் கொள்ளாமல், நாம் நடிக்கவே வந்துள்ளோம் என்று தெரிந்து கொண்டு செயல்களைப் புரிவதால், அதில் பந்தப்பட மாட்டார். தன் உண்மை சொரூபத்தில் எப்பொழுதும் இருப்பார். உலக விவகாரங்கள் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
இந்த உண்மையை உணர்ந்த இவர்களது பிராரப்தம், இவர்களது ஞானாக்கினியால் எரிந்த துணியின் சாம்பல் போன்று ஆகிவிடுவதால், பார்ப்பதற்கு காட்சியில் துணி இருந்தாலும், அது பயனற்றது போன்று, இவர்கள் பிராரப்தமும் பலனைக் கொடுப்பதில்லை. பலன் இல்லாத எந்த கர்மப் பதிவும் இவர்களுக்கு சேராது.

இவர்கள் மறைப்பொருளை மறைக்காமல் மற்றவர்களுக்கு உரைப்பதிலும், உற்சாகத்துடன் சத்சங்கங்களில் ஈடுபடுவதும் இவர்களது இயல்பாக இருக்கும். இவர்கள் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் தங்கள் அமைதியை இழக்க மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பார்கள்.

இவ்வாறு உத்தம ஞானிகள் போன்று, ஒவ்வொரு சாதகனும் தன்னிடத்திலேயே இந்த தகுதியைத் தேட வேண்டும்.

இதில், எந்த தகுதி குறைவாக இருக்கின்றதோ, அதை அனுபவத்தில் அறிந்து, அதனை நிறைவு செய்ய தீவிரமாக முயற்சிக்க வேண்டும். உத்தம ஞானியைப் போன்று உயர அனைவரும் ஊக்கமுடன் முயற்சிக்க வேண்டும்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்