ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

அறிவும் அறியாமையும்





மூன்று காலங்களையும் முக்கியமாகக் கருதுகின்ற மனிதன் எப்பொழுது எனக்கு நல்ல காலம் வரும் என்று அடிக்கடி ஜோதிடர்களை சந்தித்து சந்தேகம் கேட்கின்றான்.

மனித வாழ்க்கையின் தலையெழுத்தே, அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என நம்மில் பலர் அசட்டுத்தனமாக நம்பிக்கையும் கொள்கின்றனர்.

அதன் காரணமாக, ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் விடாமல் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு ஜோதிடர்களின் இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்குமாக இங்கும், அங்கும் அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

காலம் மனிதனை அலைக்கழிக்கிறதா? அல்லது காலமெனும் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு, மனிதன் அலைந்துக் கொண்டிருக்கிறானா?

உண்மையில் காலமென்ற ஒன்று தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயக் கண்ணாடி அது.

தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரியைப் போன்று அந்தக்கண்ணாடியில் தெரியும் நம் பிம்பத்தைக் கண்டு நாமே பயப்படுகின்றோம்.

ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.


அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் (Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.

ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.

முதலில் காலம்தான் (Time) மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதாவது, ஒரு மனிதனால் காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக் கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி விட முடியாது.

காலமும், தேசமும் நம் அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.

அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது. அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட முடியாது.

மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை (Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.


*****

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மெய் அறிவு




                                        மெய் அறிவு’ புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.

இந்த நூலின் தலைப்பு மெய் அறிவு என்பதாகும். அதாவது, இங்கு மெய் என்பதை தமிழ் மொழியில் ‘உடல்’ என்றும், ‘உண்மை’ என்றும் இரண்டு விதங்களில் அர்த்தங்கள் கொள்ளலாம்.

இங்கு அறிவுஎன்று கூறப்படுவது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கின்றது. அதையே நாம் ‘இறைவன்’ என்கின்றோம்.

இந்த அறிவு என்ற ஒன்று மட்டுமே அனைத்து உயிர்களின் உள்ளேயும் அந்தர்யாமியாக இருந்து, அவைகளை இயக்குகின்றது.

படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும், ஓரறிவு படைத்த ஒரு செல் உயிரியான ‘கொரோனா’ முதல், ஆறறிவு படைத்த பல செல்கள் உயிரியான ‘மனிதன்’ வரை, உடல் என்ற உபாதியைப் பொருத்து அறிவால் மாறுபடுகின்றது.

இதில், மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உடல்’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனில், அவனது புரிதல் உடல் சார்ந்த அறிவாக மட்டுமே தனித்து நின்று விடுகின்றது. அதே மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உண்மை’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனின், அவனது புரிதல் உண்மை அறிவான இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

ஒரு வகுப்பறையில் படிக்கின்ற பல மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒரே மாதிரியாகத்தான் பாடங்களை நடத்துகின்றார். ஆனால், அந்த மாணவர்களுக்குள் அதை புரிந்துக் கொள்கின்ற அறிவில் வித்தியாசம் இருப்பதினால், ஒருவன் அந்த பாடங்களை ஒழுங்காக புரிந்துக் கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக இருக்கின்றான்.

ஆனால், அதே வகுப்பறையில் படிக்கின்ற மற்ற சில மாணவர்களோ, அதே பாடங்களை சரியாக புரிந்துக் கொள்ளாததினால், குறைந்த மதிப்பெண்கள் பெற்று, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களாக இருக்கின்றனர்.

அதாவது, அவரவர்கள் புரிந்துக் கொள்வதை வைத்து, அவர்கள் ‘அறிவு’ இருக்கின்றது.

இதுப்போன்றே, இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உண்மை’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘ஞானி’ என்று அழைக்கப்படுகின்றான்.

இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உடல்’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘அஞ்ஞானி’ என்று அழைக்கப் படுகின்றான்.

இங்கு புரிதல்தான் வித்தியாசம்!

செவ்வாய், 24 மார்ச், 2020

எல்லாமே எண்ணங்கள்



நிலையான ஆனந்தத்திற்கு நித்தமும் தடையாக இருப்பது, ‘நான்’, ‘எனது’ என்ற அபிமான எண்ணங்களே என்பதை அறிவதற்கு, இங்கு ‘அறிவு’ அவசியமாகின்றது.

இந்த பிரத்யேகமான ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், அவனால் மட்டுமே இந்த இன்ப, துன்பங்களில் இருந்து விடுதலை அடைவது சாத்தியமாகின்றது.

இவ்வாறு எண்ணங்களை அறிந்த நான் இறப்பதே ‘முக்தி’ எனப்படுகின்றது.

அதாவது,

மனம் இறப்பது முக்தி!
உடல் இறப்பது மரணம்!

இதை அறிவதே இங்கு ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’ எனப்படுகின்றது.

பல்வேறு எண்ணங்களால் சூழப்பட்ட இந்த சூக்ஷுமமான மனம், தன்னால் கற்பித்துக் கொள்ளப்பட்ட இந்த ஸ்தூல உடலை, தன்னை அறியாமலேயே மரணத்தை நோக்கி, அனுதினமும் அழைத்துச் செல்கின்றது என்பதை, இதே மனதால் நான் அறியாமல் இருக்கின்றேன்.

ஆனால், ‘அந்த மரணம்’ இந்த ஸ்தூல உடலுக்கு உண்டாகும் பொழுது, இந்த உடலைச் சார்ந்துள்ள உலகம், உறவுகள், சொத்து, சுகம் என்ற அனைத்தும், எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரத்தை உண்டாக்கி, இறுதியில் என் இறப்பிற்குப் பிறகு இல்லாமல் மறைகின்றது.

அதுவே, ‘அந்த மரணம்’ இந்த சூக்ஷும மனதிற்கு மட்டும் உண்டாகும் பொழுது, அந்த மனம் இறப்பதினால், அனைத்து துயரங்களுக்கு காரணமாக இருந்த அனைத்திலிருந்தும் இந்த மனமும், தன்னைச் சார்ந்தவர்களின் மனதிற்கும் விடுதலையைப் பெற்றுத் தருகின்றது. இந்த மனதின் இறப்பினால், எனக்கும், மற்றவர்களுக்கும் இன்பம் மட்டுமே உண்டாகின்றது.

இதை அறிவதே, ‘ஞானம்’ எனப்படுகின்றது.


வியாழன், 5 மார்ச், 2020

ஆன்ம அனுபவம்


ஆன்ம அனுபவம்



உத்தம ஞானிகள் எப்பொழுதும் தன் சுயத்திலேயே இருப்பதால், மற்றவர்கள் பார்வைக்கு அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடுவது போன்று தோன்றினாலும், அவர்களைப் பொருத்தவரை அவற்றை முயல் கொம்பு போன்று உண்மையற்றது என்று ஒதுக்கி விடுவார்கள்.

ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் பல கதா பாத்திரங்களில், நடிப்பவர்களின் மத்தியில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று, அந்தப் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பார். அது மேடையோடு முடிந்து விடும். அனால், அவரது உண்மை நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதுப்போல,

ஆன்மானுபவத்தில் எப்பொழுதும் நிலைத்துள்ள உத்தம ஞானிகள் செயலும் நடிகர் போன்றதே, அவரும் உலக விவகாரங்களில் நடிக்க வந்தாலும், அதை உண்மையென்று ஏற்றுக் கொள்ளாமல், நாம் நடிக்கவே வந்துள்ளோம் என்று தெரிந்து கொண்டு செயல்களைப் புரிவதால், அதில் பந்தப்பட மாட்டார். தன் உண்மை சொரூபத்தில் எப்பொழுதும் இருப்பார். உலக விவகாரங்கள் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
இந்த உண்மையை உணர்ந்த இவர்களது பிராரப்தம், இவர்களது ஞானாக்கினியால் எரிந்த துணியின் சாம்பல் போன்று ஆகிவிடுவதால், பார்ப்பதற்கு காட்சியில் துணி இருந்தாலும், அது பயனற்றது போன்று, இவர்கள் பிராரப்தமும் பலனைக் கொடுப்பதில்லை. பலன் இல்லாத எந்த கர்மப் பதிவும் இவர்களுக்கு சேராது.

இவர்கள் மறைப்பொருளை மறைக்காமல் மற்றவர்களுக்கு உரைப்பதிலும், உற்சாகத்துடன் சத்சங்கங்களில் ஈடுபடுவதும் இவர்களது இயல்பாக இருக்கும். இவர்கள் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் தங்கள் அமைதியை இழக்க மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பார்கள்.

இவ்வாறு உத்தம ஞானிகள் போன்று, ஒவ்வொரு சாதகனும் தன்னிடத்திலேயே இந்த தகுதியைத் தேட வேண்டும்.

இதில், எந்த தகுதி குறைவாக இருக்கின்றதோ, அதை அனுபவத்தில் அறிந்து, அதனை நிறைவு செய்ய தீவிரமாக முயற்சிக்க வேண்டும். உத்தம ஞானியைப் போன்று உயர அனைவரும் ஊக்கமுடன் முயற்சிக்க வேண்டும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

தன்னை அறியும் மனம்





மேலே உள்ள இணைப்பை அழுத்தி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஹரிஓம்!
ஸ்ரீ குருப்யோ நம:

முகவுரை

ஒரு தொடக்கம் என்று இருந்தால், அதன் முடிவு நிச்சயம் இருந்தாக வேண்டும். இந்த தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையில் உள்ள இடை ‘வெளியை’ காலம் என்று அழைத்துக் கொண்டு, அதன் தோற்றம் - மறைவு குறிப்பிடப்படுகின்றது.

இது படைக்கப்பட்ட பொருள்கள் எதுவாக இருப்பினும், அவைகள் அத்தனைக்கும் இந்த காலம் பொருந்தும். அதனால், படைத்தல் என்றால், அதற்கு முடிவாக அழித்தல் என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும்.

இதில், ஜடப் பொருள்களாகட்டும், உயிர் பொருள்களாகட்டும் அனைத்திற்கும் ஆதாரமான மூலப்பொருள் என்ற ‘பரம்பொருள்’ ஒன்று இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான், படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் மீண்டும் மூலத்தை (பரம்பொருளை) நோக்கி நகர்கின்றது. இந்த நகர்கின்ற காலம் பொருள்களைப் பொருத்து மாறுபடுகின்றது.

இந்த கால வேற்றுமைகளுக்குக் காரணம், அவைகள் கடந்து வந்த பாதைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் என்ற இருமைகள் எனலாம்.

எது ஒன்று, இதுபோன்ற இருமைகளில் சிக்கிக் கொள்கின்றதோ, அது, அந்த மூலத்தை அடைவதற்கு இங்கும், அங்கும் அலைந்து காலதாமதம் ஆகின்றது.

இங்கு காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள ‘இடைவெளி’ என்பதினால், அந்த ‘வெளி’ ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

இங்கு ‘வெளி’ என்று குறிப்பிடுவது, இந்த பிரபஞ்சத்தையே வெளிப்படுத்துகின்ற வெட்டவெளி(ஆகாசம்) பற்றி கூறப்படுகின்றது.

இத்தகைய வெட்டவெளியில் மிதக்குகின்ற பிரபஞ்சத்திற்குள் காணப்படுகின்ற கோடானு, கோடி சூரியன்களும், விண்மீண்களும், அந்த சூரியன்களை சுற்றுகின்ற கோள்களும், அந்த கோள்களில் வசிக்கின்ற கோடானு, கோடி சீவர்களும் என அத்தனைக்கும் ஆதாரமாக, அதனுள்ளே ‘உள் வெளியாக’ ஊடுறுவி இருக்கின்றது.

ஆம், அதுவே, பரவெளி, பரம்பொருள், பரமாத்மா, பரமேஸ்வரன், பராசக்தி, பரிபூரணம் என பலவாறாக அழைக்கப்படுகின்றது.

அந்த வெட்டவெளி என்ற வெள்ளைத் திரையினிலே, ‘பிரபஞ்சம்’ என்ற வர்ணப்படம் திரையிடப்பட்டு, தினசரி மூன்று காட்சிகளாக கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என திரைப்படம் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

திரைப்படத்தின் கதாநாயகனாக ‘பரமாத்மா’ மிகச்சிறப்பாக படத்தில் நடிக்கின்றார். அவரது நடிப்பை பார்க்க விரும்பிய அவரது ரசிகர்களான, அனேக சீவர்களும், அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, உலகம் என்ற அரங்கினுள் அமர்ந்து, உல்லாசமாக படம் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

படம் பார்த்து முடிக்கின்றவரை, அந்த படத்தில் வருகின்ற காட்சிகளாகவே இந்த சீவர்கள் மாறி விடுவதினால், அந்த காட்சிகளுக்கு வேறாக, ‘நான்’ என்ற ’இன்னார்’ அந்த திரையரங்கத்தின் உள்ளே இருப்பதை மறந்துவிட்டு, அந்த திரைப்படத்துடன், திரைப்படமாக ஒன்றாகி விடுகின்றன.

அதாவது, காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என ‘திரிபுடி’ (மூன்றும்) இல்லாமல் ஒன்றாகி விடுகின்றன.

படத்தைப் பார்ப்பவன், படத்தின் காட்சிகள், படத்தில் உள்ள அனைத்தும் என இதில் எந்தவித பேதமைகளும் இன்றி ஒன்றாக மாறி விடுவதைப் போன்று, இந்த உலகத்தை உண்மை என்று கருதி, அதனுடன் ஒன்றாகி, அதிலிருந்து விடுபட முடியாமல், உண்மை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற வரை, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம்.

இதற்குக் காரணம், மனம் கற்பித்துக் கொண்ட கற்பனைகளுக்கு ஏற்ப, இந்த உலகம் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவருக்கும் உண்மை போன்று, காட்சியாகின்றது.
திரைப்படம் முடிந்ததுமே, நாம் அதிலிருந்து பிரிந்து, வெளியே வந்து, அது பொய் என அறிந்து, இந்த உலகத்தை உண்மை என்று அபிமானிக்கின்றோம்.

அதுப்போன்று, இந்த உண்மை உலகத்தில் ஒன்றாகிப் போன நம் மனம், அதிலிருந்து விடுபட்டு, நம் உண்மை சொரூபத்தை அறிந்து கொண்டால் மட்டுமே, இந்த படம் பார்த்ததின் (உடல் எடுத்ததின்) பலன் நமக்கு உண்டாகும்.

அந்த ‘பலன்’ என்னவெனில், திருப்தி, ஆனந்தம், அமைதி, மெளனம் என பலவாறாக பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

அந்த பேரானந்தம் மட்டுமே பலனாக மனதில் நிலைத்திருக்க வேண்டுமெனில், மனதின் அறியாமை அகற்றப்பட வேண்டும். அதற்கு மனதை விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை உணர வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு, இந்த நூலை ஏகாந்த பரவெளிக்கு எளிமையுடன் படைக்கின்றேன்.


நன்றி! 

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


புதன், 18 டிசம்பர், 2019

ஸ்ரீ திரிபுர ரகசியம்


ஓம் தத் சத்

ஸ்ரீ திரிபுர ரகசியம்
(ஞான காண்டம்)



முன்னுரை

     இந்த அரிய நூலானது, சம்ஸார சமுத்திரத்தில் மூழ்கி இருக்கின்ற மனிதர்களை அவர்களது பிறப்பு, இறப்பு என்கின்ற துக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு, ஹரிதாயனர் என்ற மகரிஷியால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட திரிபுரையின் மாகாத்மியத்தை வடமொழியில் இருந்து தமிழில் திருச்செந்தூரை சேர்ந்த திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர் அவர்களின் அரிய முயற்சியானால் அனைவரும் படித்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நூலை தற்பொழுது அடியேன் எளிய தமிழில் இன்றைய இளைய சமுதாயம் படித்து பயன் அடைய வேண்டும் என்று தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

   இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து,   பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, ஸ்ரீ திரிபுர ரகசியம் என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.

நன்றி!


என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

திங்கள், 16 டிசம்பர், 2019

கைவல்ய நவநீதம்


கைவல்ய நவநீதம் - மின் புத்தகம்
============================

ஆத்ம ஞானத்தை அடைய விரும்புகின்ற முமுக்ஷுக்களுக்கு அனேக நமஸ்காரங்கள்.

இதுவரை இந்த முக நூலில் எழுதப்பட்ட “கைவல்ய நவநீதம்” என்ற நூலுக்கு உரை நடை பகுதிகளை இதற்கு முன்பாக எத்தனையோ மகான்களும், ஞானிகளும் எழுதியிருக்க இவன் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று நினைக்கலாம்.

இந்த பராவித்யா முகநூல் பகுதிகளை தொடந்து படித்து வருகின்ற அன்பர் திரு. இசக்கிமுத்து ஐயா அவர்கள் என்னை எழுதும்படி கூறியதின் வாயிலாக ஈஸ்வர சித்தம் வெளிப்பட்டு, அடியேனை ஒரு கருவியாக்கி இந்த கைவல்ய நவநீதம் என்ற மூல நூலுக்கு உரை நூல் எழுத வைத்தது.

மற்றபடி இதில் “என் செயல் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் அவன் செயலே”இந்த “கைவல்ய நவநீதம்” புத்தகத்தை மின் புத்தகமாக பெற விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள லின்கினை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி!


என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.






நன்றி! :pray:

என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்